அடுத்த வருடம் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் தேர்தலுக்கான வியூகம் அமைக்கும் பணியில் அனைத்துக் கட்சிகளும் ஈடுபட்டுள்ளன. காங்கிரஸ், கம்யூனிஸ்ட், திரிணாமூல் காங்கிரஸ், சமாஜ்வாதி, திமுக உள்ளிட்ட கட்சிகள் இந்தியா கூட்டணியை அமைத்துள்ளது. இதனால் நாடாளுமன்ற தேர்தலில் என்டிஏ, இந்தியா கூட்டணி இடையே கடும் போட்டி நிலவும்.
இந்நிலையில் மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், தெலங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநில சட்டமன்ற பதவிக்காலம் வரும் ஜனவரியுடன் முடிவடைகிறது. 5 மாநிலங்களுக்கும் தேர்தல் நடத்துவது குறித்து இந்திய தலைமை தேர்தல் ஆணையம் ஆலோசனையில் ஈடுபட்டு வந்தது. மக்களவை தேர்தலுக்கு முன்பாக நடைபெறும் சட்டமன்ற தேர்தல் என்பதால் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
இந்தநிலையில், 5 மாநில சட்டமன்ற தேர்தல் அறிவிப்புகளை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் இதனை வெளியிட்டார். 5 மாநிலங்களிலும் மொத்தம் உள்ள 16.1 கோடி வாக்காளர்களில் 60.2 லட்சம் முதல் முறை வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.
அதாவது, சத்தீஸ்கரில் 2 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது (நவம்பர் 7 மற்றும் நவம்பர் 17), மிசோரமில் நவம்பர் 7ஆம் தேதியும், மத்தியப் பிரதேசத்தில் நவம்பர் 17ஆம் தேதியும், ராஜஸ்தானில் நவம்பர் 23ஆம் தேதியும், தெலங்கானாவில் நவம்பர் 30ஆம் தேதியும் தேர்தல் நடைபெறும் எனவும், அனைத்து மாநிலங்களிலும் தேர்தல் முடிவுகள் டிசம்பர் 3ஆம் தேதி வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.