உயர்கல்வியில் செயற்கை நுண்ணறிவை (AI) ஒருங்கிணைக்க, மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கூறியுள்ளார். ஜார்க்கண்டில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், AI போன்ற தொழில்நுட்பங்களால் எதிர்காலம் வியப்பை அளிக்கும் வகையில் இருக்கப் போவதாகவும், புதிதாக கொண்டுவரப்படும் பெரிய மாற்றங்கள் அனைவருக்கும் பயனளிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நேற்று ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற்ற பிட் மெஸ்ராவின் வைர விழா கொண்டாட்டங்களில் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் உரையாற்றிய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, தகவல் தொழில்நுட்பத் துறையில் புதிய முன்னேற்றங்கள் நாம் வாழும் முறையை மாற்றியுள்ளன. நேற்று வரை நினைத்துப் பார்க்க முடியாதது இன்று நிஜமாகிவிட்டது. வரும் ஆண்டுகள், குறிப்பாக செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திரக் கற்றலில் எதிர்பார்க்கப்படும் தொலைநோக்கு முன்னேற்றங்களுடன் இன்னும் வியத்தகு முறையில் இருக்கும் என்று அவர் கூறினார். செயற்கை நுண்ணறிவு, பொருளாதாரங்களை விரைவாக மாற்றுவதால், வளர்ந்து வரும் சூழ்நிலைக்கு ஏற்ப இந்திய அரசு விரைவாக தன்னைத் தகவமைத்துக் கொள்கிறது.
உயர்கல்வி நிறுவனங்களில் செயற்கை நுண்ணறிவை ஒருங்கிணைக்க பல முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தொழில்நுட்பம் சமூகங்களில் பெரும் இடையூறுகளை உருவாக்குவதால், விளிம்புநிலைக் குழுக்களில் அதன் தாக்கம் குறித்து நாம் தொடர்ந்து கவலைப்பட வேண்டும் என்று குடியரசு தலைவர் வலியுறுத்தினார். உருவாக்கப்படும் மகத்தான வாய்ப்புகள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும்; கொண்டு வரப்படும் மகத்தான மாற்றங்கள் அனைவருக்கும் பயனளிக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.