2024-25 வருடத்திற்கான இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் பாராளுமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஏற்றுமதி நடவடிக்கைகளை அதிகரிக்கும் பொருட்டு செல்போன் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் அத்தியாவசிய பொருட்களின் இறக்குமதி வரியை குறைத்து இருப்பதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்து இருக்கிறது. இதன் மூலம் செல்போன் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் அத்தியாவசிய பொருட்களின் இறக்குமதி வரி 15 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாக குறைக்கப்பட்டிருக்கிறது,
செல்போன் பேட்டரி கவர்கள் முக்கியமான லென்ஸ்கள் செல்போன் பின்பக்க கவர் உலோகம் மற்றும் பிளாஸ்டிக் போன்றவற்றால் தயாரிக்கப்பட்ட பிற இயந்திர பாகங்கள் என மொபைல் ஃபோன் அசெம்பிளியில் பயன்படுத்தப்படும் முக்கியமான மூலப் பொருட்களுக்கான இறக்குமதி வரி 10% ஆக குறைக்கப்பட்டதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இறக்குமதி வரி குறைப்பை தொடர்ந்து பேட்டி அளித்த இந்திய செல்லுலார் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் அசோசியேஷன் (ஐசிஇஏ) தலைவர் பங்கஜ் மொஹிந்த்ரூ கூறுகையில் ” இந்த வரிக்குறைப்பின் மூலம் இந்திய மொபைல் உற்பத்தி துறை உலக செல்போன் தயாரிப்பு நிறுவனங்களுக்கு கடும் போட்டியாக அமையும்” என தெரிவித்திருக்கிறார்.
மேலும் தொடர்ந்து பேசிய அவர் ” எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு 9-வது இடத்தில் இருந்த இந்தியா 2024 ஆம் ஆண்டில் 5-வது இடத்திற்கு முன்னேறி இருப்பதாக தெரிவித்தார். இந்திய தொழில்துறை எலக்ட்ரானிக்ஸ் மற்றும் செல்போன்களின் ஏற்றுமதியில் 52 சதவீதத்திற்கு உயர்ந்திருக்கிறது. கடந்த 8 வருடங்களில் இறக்குமதி நிலையில் இருந்து ஏற்றுமதியை அடிப்படையாகக் கொண்ட வளர்ச்சிக்கு முன்னேறிய ஒரே துறை செல்போன்கள் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் தயாரிப்பு துறை தான் எனவும் தெரிவித்துள்ளார் மொஹிந்த்ரூ.
உயர்நிலை செல்போன்கள் தயாரிப்பதற்கு தேவையான அத்தியாவசியமான உதிரி பாகங்களின் இறக்குமதி வரியை குறைப்பது தொடர்பாக இந்திய அரசு ஆலோசனை செய்து வந்தது. இதன் வெளிப்பாடாக தற்போதைய வரிக்குறைப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் இந்தியாவில் செல்போன்களின் உற்பத்தி அதிகரிப்பதோடு ஏற்றுமதியும் உயரும். இதன் மூலம் உலகளாவிய சந்தையில் போட்டித் தன்மை உருவாகும் . இந்திய நிறுவனங்களும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஈடாக இந்த துறையில் போட்டியிடுவதற்கான வாய்ப்பை மத்திய அரசு அமைத்து கொடுத்திருக்கிறது.