நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக கடந்த 23ஆம் தேதியன்று சந்திரயான் – 3 விண்கலத்தின் லேண்டர் நிலவில் தரையிறங்கியது. வியாழக்கிழமை காலையில் விக்ரம் லேண்டரில் இருந்து பிரக்யான் ரோவர் நிலவில் தரையிறங்கியதாக இஸ்ரோ அறிவித்தது. மாலையில் ரோவர் நிலவில் நகரத் தொடங்கி தனது செயல்பாடுகளை ஆரம்பித்துவிட்டதாகவும் கூறியது. இந்த பிரக்ராயன் ரோவர் 14 நிலவு நாட்களுக்கு மட்டுமே செயல்பாட்டில் இருக்கும் என்று கூறப்படுகிறது. அப்படியானால், 14 நாட்களுக்குப் பிறகு என்ன ஆகும் என்ற கேள்வி அனைவரது மத்தியிலும் எழும். அதற்கான விடை தான் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
சந்திரயான் – 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் இரண்டும் சூரிய சக்தியால் இயங்கக் கூடியவை. ரோவரின் ஆயுட்காலம் 14 நிலவு நாட்கள். ரோவரின் செயல்பாட்டுக்கு சூரிய ஒளி மிக முக்கியம். ரோவரில் உள்ள சூரிய மின் தகடுகள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சக்தியை வைத்துதான் ரோவர் நிலவின் நகரும்.
பூமியைப் போல சந்திரனிலும் இரவு பகல் மாறி மாறி வரும். ஆனால், நிலவில் 14 நாட்கள் இரவும், 14 நாட்கள் பகலும் இருக்கும். நிலவில் சமீபத்திய பகல் ஆகஸ்ட் 23ஆம் தேதி தொடங்கியது. இதனை கருத்தில் கொண்டுதான் அன்றைய தினம் சந்திரயான் – 3 லேண்டரை நிலவில் தரையிறக்கப்பட்டது. 14 நிலவு நாட்கள் செயல்பாட்டுக்குப் பிறகு, ரோவர் செயல்படத் தேவையான சூரிய ஒளி கிடைக்காமல் போகும். அப்போது நிலவின் மேற்பரப்பில் வெப்பநிலை -180 டிகிரி செல்சியஸ் அளவுக்குக் குறையும். இவ்வளவு குளிரில் நிலவில் இருக்கும் அனைத்து பொருட்களும் உறைந்துபோய்விடும்.
சந்திரயான் – 3 விக்ரம் லேண்டர் மற்றும் ரோவர் பிரக்யான் இரண்டும் 14 நாட்களுக்குப் பின் முற்றிலும் செயலற்றுப் போய்விடும் என்று சொல்ல முடியாது. இரண்டு வாரங்களுக்கு பிறகு மீண்டும் நிலவின் பகல் நாட்கள் தொடங்கும்போது மற்றொரு 14 நாட்கள் லேண்டரையும், ரோவரையும் உயிர்ப்பித்து இயக்க வாய்ப்பு உள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
சூரியன் மறையும் தருணத்தில், அனைத்தும் இருளில் மூழ்கிவிடும். எனவே, எந்த கருவியும் செயல்படுவது சாத்தியமில்லை. மீண்டும் பகல் வரும்போது இன்னும் செயல்படும் நிலையில் இருக்கும் பட்சத்தில், அது மீண்டும் உயிர்பெற்று, வேலை செய்ய வைக்க முடியும். அதற்கான வாய்ப்பு இருக்கும் என்று நம்புகிறோம் என இஸ்ரோ தலைவர் எஸ் சோமநாத் கூறியுள்ளார்.
மீண்டும் பூமிக்குத் திரும்புமா..?
சந்திரயான் – 3 மீண்டும் பூமிக்குத் திரும்புமா? என்ற கேள்விக்கும், அதற்கு வாய்ப்பு இல்லை என்று அவை நிலவிலேயே இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார். இதற்கு முன் இஸ்ரோ செவ்வாய் கிரகத்தை ஆராய்வதற்கு அனுப்பிய மங்கள்யான் விண்கலம் நிர்ணயிக்கப்பட்டதற்கும் மேலாக அதிக நாட்கள் செயல்பாட்டில் இருந்தது. அதேபோல், சந்திரயான் – 3 விண்கலத்தின் லேண்டர் மற்றும் ரோவர் இரண்டும் அதிக நாட்கள் செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.