திருப்பத்தூர் மாவட்டம் பந்தாரப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர்கள் பெருமாள். இவருக்கு ஜெயப்பிரதா என்ற மனைவியும், ஜீவிதா என்ற மகளும் உள்ளனர். இவரது மகள் ஜீவிதா, கிருஷ்ணகிரியில் உள்ள பர்கூர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்துள்ளார். இவரது தாய் ஜெயப்பிரதாவிற்கு 35 வயதான சரண் ராஜ் என்ற தம்பி உள்ளார். சின்னகாசிநாயக்கன் பட்டியைச் சேர்ந்த சரண் ராஜ், டிரைவராக வேலை செய்து வருகிறார். இந்நிலையில், கடந்த சில வருடங்களாக ஜீவிதாவும் சரண் ராஜும் காதலித்து வந்துள்ளனர். சரண் ராஜுக்கு கொலை வழக்கு ஒன்றில் தொடர்பு இருந்துள்ளது. இதனால், ஜெயப்பிரதா தனது தம்பிக்கு தனது மகளை திருமணம் செய்து வைக்க எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
தனது தாய் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்ததால், ஜீவிதா சரண்ராஜிடம் இருந்து ஒதுங்கியுள்ளார். ஜீவிதாவை சமாதனம் செய்ய, கடந்த ஒரு வாரமாக ஜீவிதா செல்லும் இடங்களுக்கெல்லாம் சரண் ராஜும் சென்றுள்ளார். ஆனால், ஜீவிதா அவரிடம் பேசவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த சரண் ராஜ், கல்லூரி விடுமுறையால் வீட்டில் தனியாக இருந்த ஜீவிதாவை வேறொரு வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், ஜீவிதாவை வாயில் துணியை வைத்து பொத்தி கத்தியால் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்துள்ளார். தொடர்ந்து, ஜீவிதாவின் செல்போனை எடுத்த சரண் ராஜ், தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக கடிதம் எழுதி வைத்துவிட்டு தப்பி ஓடியுள்ளார்.
ஜீவிதா ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதை பார்த்து கதறி அழுத குடும்பத்தினர், இது குறித்து நாட்றாம்பள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், ஜீவிதாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், சரண் ராஜ் எழுதியுள்ள கடிதத்தில், “அன்புள்ள அக்கா, மாமா, அம்மா, அப்பாவுக்கு சரண் ராஜ் எழுதுவது. நானும் ஜீவிதாவும் நான்கு வருடங்களாக காதலித்தோம். ஆனால் திருமணம் செய்து கொள்ள முடியாததால் இந்த முடிவுக்கு வந்துவிட்டோம்” என்று குறிப்பிட்டிருந்தார்.
இதையடுத்து, நிலக்கல் நத்தம் பகுதியில் பதுங்கி இருந்த சரன் ராஜை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.