பிரிட்டன் நாட்டின் கார்டிப் பகுதியில் இந்தியாவைச் சேர்ந்த மாணவரான பிரீத் விகல் என்பவர் வசித்து வந்தார். கடந்தாண்டு ஜூன் 3ஆம் தேதி இரவு அவர், தனது வீட்டிற்கு அருகே உள்ள கிளப்பிற்கு சென்றுள்ளார். அப்போது இளம்பெண் ஒருவர் தனது நண்பர்களுடன் இரவு விருந்துக்காக அங்கு வந்துள்ளார். அங்கு அவர்கள் மது போதை கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். இதனை பிரீத் விகல் கவனித்து வந்துள்ளார். பார்ட்டி முடிந்த நிலையில், நண்பர்கள் அனைவரும் தாங்கள் வந்த கார்களில் வீடு திரும்பினர். ஆனால், வெளியே வந்த அந்த இளம்பெண்ணுக்கு அதீத போதை காரணமாக சுயநினைவு இல்லை. மேலும், அரை மயக்க நிலையில் தள்ளாடிக் கொண்டிருந்துள்ளார்.
இதனை கவனித்த இந்திய மாணவர் பிரீத், அதை தனக்கு சாதகமாக மாற்றிக்கொண்டார். அந்த பெண்ணுக்கு உதவுவதாக கூறி, அந்த பெண்ணுக்கு அருகே சென்று தோள் கொடுத்து உதவுவது போல் நடித்துள்ளார். பின்னர், சிறிது தூரத்தில் அப்படியே அவரை தூக்கிக்கொண்டு தனது வீட்டிற்கு வந்துள்ளார். அங்கு வைத்து போதையில் நினைவற்று இருந்த பெண்ணை பிரீத் விகல் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மறுநாள் காலையில் அந்த பெண்ணுக்கு நினைவு வந்தபோது, வேறு ஒருவரின் படுக்கையில் நிர்வாணமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். மேலும் தான் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை உணர்ந்த அப்பெண் நேரடியாக சென்று காவல்துறையில் புகார் அளித்தார்.
அதன் பேரில் விசாரணை நடத்திய போலீசாருக்கு, போதையில் இருந்த இளம்பெண்ணை இளைஞர் பிரீத் சாலையில் தூக்கிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் கிடைத்தது. அத்துடன் இளம்பெண் தனது படுக்கையில் இருக்கும் புகைப்படத்தை பிரீத் தனது நண்பர்களுக்கு பகிர்ந்துள்ளார். அதனையும் கைப்பற்றிய போலீசார், ஆதாரங்களின் அடிப்படையில் அவரை கைது செய்தனர். இந்த வழக்கில் விசாரணை முடிந்து அவர் குற்றவாளி என தீர்ப்பு வந்த நிலையில், இந்திய மாணவர் பிரீத் விகல்க்கு 6 ஆண்டுகள் 9 மாதம் சிறை தண்டனை வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.