கோவை அருகே திமுகவைச் சார்ந்த பெண் கவுன்சிலர் வீட்டிற்குள்ப்புகுந்து, கவுன்சிலர் மற்றும் அவருடைய கணவர், மகன் என்று மூவரையும் சரமாரியாக வெட்டிவிட்டு, தப்பி சென்ற கும்பலை தற்போது காவல்துறையினர் கைது செய்து இருக்கிறார்கள்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர், கோவை அருகே உள்ள மலுமிச்சம்பட்டி அவ்வையார் நகர் 2வது தெருவை சேர்ந்த திமுக கவுன்சிலர் சித்ரா, அவருடைய கணவர் ரவிக்குமார் மற்றும் அவர்களுடைய மகன் மோகன் உள்ளிட்டோர் இரவு வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தனர்.
அப்போது முகமூடி அணிந்த ஐந்து பேர் வீட்டிற்குள் நுழைந்த சத்தம் கேட்டு எழுந்த, கணவன், மனைவி இருவரும், நீங்கள் யார்? எதற்காக இங்கே வந்தீர்கள்? என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். உடனடியாக, அந்த கும்பல் மறைத்து வைத்திருந்த அரிவாளால், கவுன்சிலர் சித்ரா, அவருடைய கணவர் ரவிக்குமார் உள்ளிட்டோரை சரமாரியாக வெட்டியது. பின்னர் அவர்களை தடுக்க வந்த அவர்களுடைய மகன் மோகன் என்பவரையும், அந்த கும்பல் வெட்டிவிட்டு, அங்கிருந்து தப்பி சென்றது.
அதன் பிறகு ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அவர்கள் மூவரும், கூச்சலிட்டதால், அக்கம், பக்கத்தினர் ஓடி வந்து பார்த்து, அவர்களை மீட்டு, கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவமனையில் அவர்களுக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. அதோடு, இது தொடர்பாக, செட்டிபாளையம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில், பல்வேறு உண்மைகள் தெரிய வந்துள்ளது. அதாவது, கவுன்சிலர் சித்ரா சென்ற ஆறு மாதங்களுக்கு முன்னர், 3.5 சென்ட் நிலத்தை வாங்கி இருக்கிறார். அதனை, மலுமிச்சம்பட்டி அம்பேத்கர் நகரில், பெட்டிக்கடை நடத்தி வரும் ராஜா(23) என்ற நபர் இடைத்தரகராக செயல்பட்டு, வாங்கி கொடுத்ததாக தெரிகிறது. இதற்காக, ராஜாவிற்கு இரண்டு சதவீதம் கமிஷன் பேசப்பட்டு இருக்கிறது. ஆனாலும், அந்த கமிஷன் தொகையை சித்ரா, ராஜாவிற்கு வழங்கவில்லை என்று சொல்லப்படுகிறது. இதனால், சித்ராவுக்கும், ராஜாவுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இதன் காரணமாக, ஆத்திரம் கொண்ட ராஜா, தனக்கு தெரிந்த நான்கு நண்பர்களுடன் சேர்ந்து, முகமூடி அணிந்து கொண்டு, சித்ராவின் வீட்டிற்கு சென்று, சித்ரா உட்பட அவருடைய கணவர், மகன் என்று அனைவரையும் அரிவாளால் சரமாரியாக வெட்டியது காவல்துறையினரின் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.
ஆகவே இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட ராஜாவை பிடித்து, காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில், முத்துப்பாண்டி(24), முகேஷ்கண்ணன்(22), பிச்சைபாண்டி(23),ஸ்ரீரக்சித்(18) உள்ளிட்டோருடன் சேர்ந்து, பெண் கவுன்சிலரை ராஜா அரிவாளால் வெட்டினார் என்பது தெரிய வந்துள்ளது. அதன் பிறகு, அவர்கள் ஐந்து பேரையும் கைது செய்த காவல்துறையினர், அவர்களிடம் தங்களுடைய அடுத்த கட்ட விசாரணையை மேற்கொண்டு வருகிறார்கள்.