ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களில் சேவைக் கட்டணம் வசூலிக்க மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
சில மாதங்களுக்கு முன் ஹைதராபாத்தில் உணவகம் ஒன்றில் சேவைக் கட்டணம் வசூலித்ததை எதிர்த்து ஒருவர் நுகர்வோர் நீதிமன்றத்தை நாடி, தான் செலுத்திய சேவைக் கட்டணத்தை திரும்பப் பெற்றார். மத்திய அரசும் சேவைக் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று உணவகங்களுக்கு அறிவுறுத்தியது. இந்நிலையில், நியாயமன்ற வர்த்தக நடைமுறைகள் மற்றும் நுகர்வோர் உரிமை மீறல்களைத் தடுப்பதற்கான வழிகாட்டுதல்களை மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் வெளியிட்டுள்ளது.
அதில், ”ஹோட்டல்கள் அல்லது உணவகங்களில் தானாகவோ அல்லது உணவுக்கான கட்டணத்துடன் இணைத்தோ சேவைக் கட்டணம் வசூலிக்கக் கூடாது. வேறு பெயர்களிலும் சேவைக் கட்டணம் வசூலிக்கக் கூடாது. சேவைக் கட்டணம் செலுத்துமாறு வாடிக்கையாளர்களையும் கட்டாயப்படுத்தக் கூடாது. மேலும், சேவைக் கட்டணத்தை வாடிக்கையாளர்களே தர விரும்பினால் கொடுக்கலாம். அது வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கே விடப்படுகிறது. மேலும், உணவுக் கட்டணத்துடன் சேர்த்தோ அல்லது மொத்த தொகைக்கு ஜிஎஸ்டி விதிப்பதன் மூலமாகவோ சேவைக் கட்டணத்தை வசூலிக்கக் கூடாது.
இந்த உத்தரவுக்கு பிறகும் எந்தவொரு ஹோட்டல் அல்லது உணவகங்கள் சேவைக் கட்டணம் வசூலித்தால், பில் கட்டணத்தில் இருந்து அதை நீக்குமாறு வாடிக்கையாளர்கள் கோரிக்கை விடுக்கலாம். தேசிய நுகர்வோர் உதவி எண்ணான 1915-க்கும் வாடிக்கையாளர் தொடர்புகொண்டு புகார் அளிக்கலாம். NCH செயலி மூலமாகவும் புகார் பதிவு செய்யலாம். மேலும், நுகர்வோர் ஆணையத்திலும் வாடிக்கையாளர் புகார் அளிக்கலாம்.” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.