வீட்டில் குழந்தைகள் இருந்தால் எப்போதும் கலகலப்பாகவே வீடு காணப்படும். குழந்தைகள் சில நேரம் அடம் பிடித்து பெற்றோர்களை தொந்தரவு செய்தாலும், பல சமயங்களில் அவர்கள் செய்யும் துடுக்குத்தனமான சேட்டைகள் ரசிக்கும் படியாக இருக்கும்.
ஆனால் ஒரு சில விஷயங்களில் பெற்றோர்களின் கவனக்குறைவு காரணமாக, எதுவுமே தெரியாத பச்சிளம் குழந்தைகள் செய்யும் சேட்டைகள் காரணமாகவே அந்த குழந்தைகளின் உயிர் பறிபோகும் அபாயம் ஏற்படலாம்.
ஆகவே குழந்தைகளின் விஷயத்தில் எப்போதும் பெற்றோர்கள் கண்ணும் கருத்துமாக இருப்பது மிகவும் அவசியம்.
கர்நாடக மாநிலம் உத்தர கன்னடா மாவட்டம் கார்வாரை சேர்ந்த நபர் தான் சந்தோஷ் கல்குட்கர். இவருடைய மனைவி சஞ்சனா இந்த தம்பதிகளுக்கு சானித்யா என்ற 8 மாத பெண் குழந்தை இருக்கிறது.
சந்தோஷ் எப்போதும் தன்னுடைய செல்போனை சார்ஜில் போட்டு, அதன் பிறகு வேலைக்கு செல்லும் அவசரத்தில், ஸ்விட்ச் ஆப் செய்யாமலே சாக்கெட்டில் அந்த சார்ஜர் ஒயரை அப்படியே விட்டு விடுவார்.
அதேபோன்று சார்ஜர் செய்யப்பட்டு, அதன் பிறகு அந்த சாக்கெட்டிலேயே அந்த சார்ஜர் பொருத்தப்பட்டு ஸ்விட்ச் ஆப் செய்யப்படாமல் இருந்தது. அப்போது வீட்டிற்குள் அங்குமிங்கும் துருதுருவென ஆடிப்பாடி விளையாடிக் கொண்டிருந்த எட்டு மாத குழந்தை சானித்யா எதிர்பாராத விதமாக அந்த தொங்கிக் கொண்டிருந்த சார்ஜர் வயரை வாயில் வைத்திருக்கிறார். அப்போது திடீரென்று மின்சாரம் தாக்கி அந்த குழந்தை அலேக்காக தூக்கி வீசப்பட்டது.
உடனே சத்தம் கேட்டு பதறியபடி ஓடி வந்த அந்த குழந்தையின் தாய், அந்த குழந்தை மூச்சு பேச்சின்றி கிடந்ததைக் கண்டு பதறிப்போய், குழந்தையை தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு பரபரக்க ஓடினார்.
மருத்துவமனையில் அந்த குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் அந்த குழந்தை ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், அடித்து மோதிக் கொண்டு கதறி அழுதனர்.