தூத்துக்குடி அருகே, தன்னுடைய காதலியை சந்தித்து, அவருக்கு நடைபெற இருந்த திருமணத்தை நிறுத்துவதற்காக ஓடோடி வந்த காதலனை பெண்ணின் உறவினர்கள் அடித்து கொலை செய்த சம்பவம் தூத்துக்குடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே குளத்தூர் சுப்பிரமணியபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மாரியப்பன் (28) கோவையில் இவர் பெயிண்டராக பணியாற்றி வருகிறார். இவரும் அதே கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணும் காதலித்து வந்தனர். இவர்களின் காதல் விவகாரம் பெண்ணின் வீட்டாருக்கு தெரியவந்து, அந்த பெண்ணுக்கு அதே கிராமத்தைச் சேர்ந்த இசக்கிமுத்து என்பவரிடம் திருமணம் நடைபெறுவதற்கான ஏற்பாடு நடைபெற்றது.
இதை கேள்வியுற்று அதிர்ச்சியடைந்த மாரியப்பன் சென்ற 18ஆம் தேதி கோவையிலிருந்து குளத்தூர் சுப்பிரமணியபுரத்துக்கு வருகை தந்தார். அங்கு சென்று, தன்னுடைய காதலியை தனியாக சந்தித்து அவருக்கு நடைபெற இருந்த திருமணத்தை நிறுத்த வேண்டும் என்று திட்டமிட்டு மாரியப்பன் தன்னுடைய சொந்த ஊருக்கு வந்ததாக தெரிகிறது.
கடந்த 18ம் தேதி இரவு மாரியப்பன் சொந்த ஊருக்கு வந்து தான் காதலித்த பெண்ணை சந்திப்பதற்காக முயற்சி செய்திருக்கிறார். ஆனால், அப்போது அந்த பெண்ணின் உறவினர்களான மாடசாமி மற்றும் முனுசாமி என்ற ராஜு உள்ளிட்ட இருவரும் மாரியப்பனை அந்த பெண்ணை சந்திக்க விடாமல் தடுத்துள்ளனர். ஆகவே, அந்த சமயத்தில், மூன்று பேருக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு, ஒருவரை, ஒருவர் தாக்கி கொண்டனர். இதில் நிலைகுலைந்து கீழே விழுந்த மாரியப்பனை, அந்தப் பெண்ணின் உறவினர்களான இருவரும் சேர்ந்து, கழுத்திலும், அடி வயிற்றிலும் மிதித்து மற்றும் கற்களை தூக்கி, வீசி கொலை செய்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் தான், கடந்த 19ஆம் தேதி காலை மாரியப்பன் அந்த கிராமத்தின் பனங்காட்டு பகுதியில் கழுத்து மற்றும் மார்பு பகுதியில் பலத்த காயங்களுடன் பிணமாக மீட்கப்பட்டார். பின்னர் இது தொடர்பாக குளத்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது.
இந்த தகவலின் பெயரில், சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மாரியப்பனின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியின் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் அத்துடன், இந்த சம்பவம் நடைபெற்ற பகுதியில் தடவியல் நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு தீவிர சோதனை நடத்தப்பட்டது.
அந்த சோதனையின் முடிவில், மாரியப்பனின், காதலியின் உறவினர்கள் தான் அவரை கொலை செய்தனர் என்று உறுதி செய்யப்பட்ட நிலையில், அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். அதன் பிறகு இருவரையும் கோவில்பட்டி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.