என்.எல்.சி. நிறுவனத்தில் காலை உணவு சாப்பிட்ட 30-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான என்எல்சி-யிலிருந்து தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல மாநிலங்களுக்கு கடலூர் மாவட்டம் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவன சுரங்கத்தில் தயாராகும் மின்சாரம் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. இங்கு நெய்வேலி நிலக்கரி நிறுவனம் அனல்மின் நிலையம்-I மற்றும் விரிவாக்கம், அனல்மின் நிலையம் – II மற்றும் விரிவாக்கம், என்.என்.டி.பி என 5 அனல்மின் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான இதில், நிரந்தரம் மற்றும் ஒப்பந்தத்தின் அடிப்படையில் சுமார் 10,000-க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர்.

இரண்டாவது அனல்மின் நிலையத்தில் மட்டும் நாளொன்றுக்கு 1,470 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. 7 யூனிட்டுகள் கொண்ட இந்தப் பிரிவில் சுமார் 3,000 தொழிலாளர்கள் வேலைபார்த்து வருகின்றனர். இன்று வழக்கம்போல தொழிலாளர்கள் காலை ஷிஃப்டில் பணிபுரிந்து வந்துள்ளனர். அவர்களுக்கு தினமும் காலை 8.30 மணி முதல் 9 மணிக்குள் அங்கிருக்கும் கேன்டீனில் உணவு வழங்கப்படுவது வழக்கம். அதன்படி, இன்று காலை எஸ்எம்இ, ஜிடபிள்யூசி பிரிவுகளில் பணியாற்றிக் கொண்டிருந்த தொழிலாளர்களுக்கு தயிர் சாதமும், இட்லியும் வழங்கப்பட்டது. அதை சாப்பிட்ட சிறிது நேரத்தில் ஒரு சிலருக்கு வாந்தியும், மயக்கமும் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து, தயிர் சாதம் வைக்கப்பட்ட பாத்திரம் சோதனை செய்யப்பட்டது. அந்த பாத்திரத்தில் ஒரு எலி இறந்து கிடந்தது தெரியவந்தது. அந்த உணவை சாப்பிட்ட 30-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஆம்புலன்ஸ் மூலம், என்.எல்.சி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.