மணிப்பூருக்கு இரண்டு நாள் பயணமாக சென்றுள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, ஒத்த கருத்துடைய கட்சி தலைவர்களை சந்தித்து பேசச உள்ளார். ஐக்கிய நாகா கவுன்சில் (UNC) தலைவர்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளின் உறுப்பினர்கள் ஆகியோரை இம்பாலில் உள்ள விடுதியில் ராகுல் காந்தி இன்று சந்திக்க உள்ளதாக மணிப்பூர் காங்கிரஸ் தலைவர் கெய்ஷாம் மேகசந்திரா தெரிவித்துள்ளார்.
முன்னதாக, ராகுல் காந்தி செய்தியாளர்களை சந்தித்து அவர்களின் கேள்விக்கு பதில் அளித்தார். அப்போது, மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடி அமைதி காக்கிறாரே என செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த ராகுல் காந்தி, “அரசியல் விவகாரங்கள் குறித்து இங்கு கருத்து தெரிவிக்க விருப்பம் இல்லை. நான் அரசியல் கருத்து எதுவும் கூற இங்கு வரவில்லை. இந்த விவகாரங்கள் குறித்து இங்கு கருத்து தெரிவிக்க மாட்டேன். விரைவில் இங்கு அமைதி திரும்ப வேண்டும்” என்றார்.
மணிப்பூரில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்தது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு வெளியிட்ட ராகுல் காந்தி, “மணிப்பூரில் நடந்த வன்முறையால் சொந்தங்களையும், வீடுகளையும் இழந்தவர்களின் நிலையைப் பார்ப்பதும் கேட்பதும் மனவேதனை அளிக்கிறது. நான் சந்திக்கும் ஒவ்வொரு சகோதரன், சகோதரி மற்றும் குழந்தையின் முகத்திலும் உதவிக்கான அழுகை இருக்கிறது” என குறிப்பிட்டுள்ளார்.
வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில் அமைதிக்காக வேண்டுகோள் விடுத்த ராகுல் காந்தி, “மணிப்பூருக்கு இப்போது மிக முக்கியமாக தேவைப்படும் விஷயம் அமைதி. நமது மக்களின் வாழ்க்கையையும் வாழ்வாதாரத்தையும் பாதுகாப்பது. அந்த இலக்கை நோக்கி நமது முயற்சிகள் ஒன்றிணைய வேண்டும்” என்றார்.