குளித்தலை அருகே 16 வயது சிறுமியை கடந்த 6 மாதங்களாக பாலியல் பலாத்காரம் செய்து வந்த சிறுமியின் சித்தப்பா, காதலன் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மேட்டு மகாதானபுரத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர், கோட்டக்கரையான்பட்டியில் உள்ள தனது தாத்தா வீட்டில் வசித்து வந்தார். இவர், கடந்த ஜூன் மாதம் 6ஆம் தேதி, அருகில் இருந்த சோளக்காட்டில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு ஆடு மேய்த்துக் கொண்டிருந்த செங்குளத்தைச் சேர்ந்த பெரியசாமி (60) என்பவர் சிறுமியை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனை கண்ட சிறுமியின் சித்தப்பா இடும்பன் (31) பெரியசாமியை விரட்டிவிட்டு தனது மகள் முறை என்றும் பாராமல் அவருடம் சிறுமியை நாசம் செய்துள்ளார்.

இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த சஞ்சீவ் என்பவருக்கும் சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு அவரும் சிறுமியிடம் பாலியல் ரீதியாக உடலுறவு வைத்துள்ளார். கடந்த 6 மாதங்களாக இவர்கள் 3 பேரும் சிறுமியை மாறி மாறி பலாத்காரம் செய்து வந்துள்ளனர். இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. பின்னர், சம்பவ இடத்திற்கு சென்று சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டதில், கடந்த 6 மாதங்களாக இவர்கள் 3 பேரும் சிறுமியை பலாத்காரம் செய்துவந்தது உறுதியானது. இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் மகளிர் போலீசார் அவர்கள் 3 பேரையும் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். மேலும், அவர்கள் 3 பேரையும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திய பின்னர், கரூர் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.