தமிழ்நாட்டில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இறுதி தேர்வுகள் நடந்து முடிந்த நிலையில், தற்போது கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, அக்னி நட்சத்திரம் முடிந்தும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் தொடர்ந்து பள்ளிகள் திறப்பு ஒத்திவைக்கப்பட்டது.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, “ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை ஜூன் 14ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றும் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 12ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்” என்று அதிரடியாக அறிவித்தார். இதனால் மாணவர்களின் கோடை விடுமுறை மீண்டும் நீட்டிக்கப்பட்டது.
இந்நிலையில், தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்துகள் இயக்க போக்குவரத்து கழகம் திட்டமிட்டுள்ளது. சொந்த ஊர் சென்ற மாணவர்கள் ஊர் திரும்ப வசதியாக 1500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. அதில். சென்னைக்கு 650 பேருந்துகளும் கோவை, மதுரை, நெல்லை, திருச்சி, சேலம் மற்றும் பெங்களூரு நகரங்களுக்கு 850 பேருந்தில் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.