புதுச்சேரி அருகே வேலை முடிந்து வீட்டிற்கு வந்து கொண்டிருந்த ஓட்டுனரை வழிமறித்த போதை ஆசாமிகள் சிலர், அவரின் தலையில் கல்லை போட்டு, கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
புதுச்சேரியை அடுத்துள்ள விழுப்புரம் மாவட்டத்தில், கண்டமங்கலம் என்ற பகுதியைச் சேர்ந்த கார் ஓட்டுநர் சண்முகசுந்தரம்(48) இவர் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணி நடைபெற்று வருவதால், தற்காலிகமாக கண்டமங்கலம் அருகே இருக்கின்ற புதுச்சேரி பகுதியான, அரியூர் பகுதியில், தன்னுடைய மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் தான், நேற்று முன்தினம் நள்ளிரவு பணி முடிந்தவுடன், பேருந்தில் வந்துள்ளார். அப்போது, ஒரு பேருந்து நிறுத்தத்தில், இறங்கிய அந்த நபரை, மதுபோதையில் இருந்த வாலிபர்கள் சிலர், தலையில் கல்லை போட்டு, கொலை செய்துவிட்டு, அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.
இந்நிலையில்தான், புதுச்சேரி, அரியூர் பகுதி விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் தலை நசுக்கப்பட்ட நிலையில், கிடந்ததாக வில்லியனூர் காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.அதன் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், தெரிய வந்த உண்மையை அடிப்படையாகக் கொண்டு, சண்முகசுந்தரத்தை கொலை செய்து விட்டு, தப்பிச்சென்ற வாலிபர்களை கைது செய்வதற்காக வில்லியனூர் காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.