fbpx

ஒத்திவைக்கப்படுகிறதா TNPSC தேர்வு…? தமிழக அரசுக்கு முக்கிய கோரிக்கை…!

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென்மாவட்ட தேர்வர்கள் வசதிக்காக டி.என்.பி.எஸ்.சி பொறியியல் பணி தேர்வை ஒத்தி வைக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் தனது அறிக்கையில்; தமிழ்நாடு அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் காலியாக உள்ள 369 இடங்களை நிரப்புவதற்காக ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளுக்கான எழுத்துத் தேர்வுகள் வரும் ஜனவரி 6 மற்றும் 7ஆம் தேதிகளில் நடைபெறும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்திருக்கிறது. இந்தத் தேர்வுகளுக்கு ஏற்கனவே போதிய காலக்கெடு வழங்கப்படாத நிலையில், தென் மாவட்டங்களிலும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலும் மழை – வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் அந்த பகுதிகளைச் சேர்ந்த தேர்வர்களை இந்த எழுத்துத் தேர்வுகளுக்கு தயாராக முடியாத நிலையை ஏற்படுத்தியுள்ளன.

ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளுக்கு மழை – வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலிருந்து மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். தென் மாவட்டங்களில் அண்மையில் பெய்த மழை மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ளத்தால் எத்தகைய பேரழிவுகள் ஏற்பட்டன என்பது அனைவரும் அறிந்தது தான்.

மழை – வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென் மாவட்டங்களைச் சேர்ந்த தேர்வர்கள் போட்டித் தேர்வுக்கு தயாராக முடியாத நிலையில், தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என்று டி.என்.பி.எஸ்.சிக்கு பலமுறை வேண்டுகோள் விடுத்தும் அதை தேர்வாணையம் கண்டுகொள்ள வில்லை. அறிவிக்கப்பட்ட அட்டவணைப்படி எழுத்து தேர்வுகளை நடத்த ஆணையம் தயாராகி வருகிறது.ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசிநாள் நவம்பர் 11ஆம் நாள் ஆகும். அதன்பின் சரியாக சரியாக 55 நாட்களில் ஜனவரி 6ஆம் நாள் எழுத்துத் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

ஐ.டி.ஐ முதல்வர் உள்ளிட்ட முக்கியமான பணிகளுக்கு தகுதியானவர்களை தேர்ந்தெடுப்பதற்கான போட்டித்தேர்வுகளுக்கு இந்த காலக்கெடு போதுமானது அல்ல.போட்டித் தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு முடிவடைந்த நாளில் இருந்து 20 நாட்களில் சென்னை- புறநகர் மாவட்டங்கள் கடுமையான மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன. 35 நாட்களில் தென் மாவட்டங்களை பேரிடர் தாக்கியது. அதன் பாதிப்பிலிருந்து இன்னும் மக்கள் விடுபடவில்லை.

நிவாரணப் பணிகள் நிறைவடைய இன்னும் சில வாரங்கள் தேவை; இதை தேசியப்பேரிடராக அறிவிக்க வேண்டும் என்றும் தமிழக அரசு வலியுறுத்தி வருவதிலிருந்தே பாதிப்பின் தீவிரத்தை அறிந்து கொள்ள முடியும்.ஆனால், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் பாதிப்புகளின் தீவிரத்தை உணர்ந்து கொள்ள முடியவில்லை. அறிவிக்கப்பட்ட தேதியில் தேர்வை நடத்துவதில் உறுதியாக உள்ளது. அதே நேரத்தில் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் மழை – வெள்ள பாதிப்புகளின் தீவிரத்தை நன்றாக உணர்ந்து கொண்டு ஜனவரி 7ஆம் தேதி நடைபெறவிருந்த பட்டதாரி ஆசிரியர் பணிக்கான எழுத்துத் தேர்வுகளை பிப்ரவரி 4ஆம் தேதிக்கு ஒத்திவைத்திருக்கிறது.

தேர்வர்களின் நலனில் ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு இருக்கும் அக்கறை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு வாரியத்திற்கு இல்லாதது வருத்தம் அளிக்கிறது.ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளுக்கான அடுத்த ஆள்தேர்வு இன்னும் இரு ஆண்டுகளுக்குப் பிறகு தான் நடைபெறும். மழை – வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை மற்றும் தென்மாவட்டங்களைச் சேர்ந்த தேர்வர்கள் இந்தத் தேர்வை சரியாக எழுதாவிட்டால், அடுத்த வாய்ப்புக்காக இன்னும் இரு ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். அதற்குள் பலர் வயது வரம்பை கடந்திருப்பார்கள் என்பதால் அவர்களுக்கு இன்னொரு வாய்ப்புக் கிடைக்காது.

இந்தக் காரணங்களையும், மழை -வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளையும் கருத்தில் கொண்டு வரும் ஜனவரி 6 மற்றும் 7ஆம் தேதிகளில் நடைபெறவிருக்கும் எழுத்துத் தேர்வுகளை குறைந்தது ஒரு மாதத்திற்கு ஒத்தி வைக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு தமிழக அரசு ஆணையிட வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

Vignesh

Next Post

அதிர்ச்சி...! 6 மாதம் பணிக்கு வராத 12,987 அரசு பள்ளி ஆசிரியர்கள்...! அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை...!

Sun Dec 31 , 2023
பீகாரில் பணிக்கு வராத 12,987 அரசு பள்ளி ஆசிரியர்களின் சம்பளத்தை பிடித்தம் செய்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. பீகார் கல்வித் துறை கடந்த 6 மாதங்களில் பணிக்கு வராத 12,987 அரசு பள்ளி ஆசிரியர்களின் சம்பளத்தை பிடித்தம் செய்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. கடந்த ஆறு மாதங்களில் விதிமீறல்களில் ஈடுபட்ட 39 பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர், அதே சமயம் 13 கல்வியாளர்கள் முன் அனுமதியின்றி ஆறு மாதங்கள் முதல் இரண்டு ஆண்டுகள் […]

You May Like