நெல்லை மாவட்டம் கயத்தாறு போலீசார் மதுரை நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பஸ்ஸை தனியார் காரில் விரட்டி பிடித்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை சாந்தி நகரைச் சார்ந்தவர் செய்யது அலி பாத்திமா இவர் தனது தாயாருடன் கயத்தாறு பகுதியில் ஒரு துக்க வீட்டிற்காக திருநெல்வேலி இருந்து மதுரை சென்ற அரசு பேருந்தில் சென்றிருக்கிறார். கயத்தாறு பேருந்து நிறுத்தத்தில் இறங்கிய இவர் தனது மணி பர்ஸை தேடிய போது அது காணாமல் போய் இருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனைத் தொடர்ந்து கயத்தாறு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இவரது கைப்பையில் நாலாயிரத்து ஐநூறு ரூபாய் ரொக்க பணம் செல்போனும் இருந்துள்ளது. மேலும் தனது பக்கத்தில் அமர்ந்து பயணித்தவர்கள் மீதுதான் தனக்கு சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளார் அவர்களது அங்க அடையாளங்களையும் காவல்துறையினருக்கு தெரிவித்திருக்கிறார்.
இதனையடுத்து கயத்தாறில் இருந்து மதுரை நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்தை தனியார் வாகனத்தில் காவல்துறை அதிகாரிகள் பின் தொடர்ந்தனர். கோவில்பட்டியில் வைத்து அந்த பேருந்தை மடக்கி பிடித்து அதில் செய்த அலி பாத்திமாவின் அருகில் இருந்து பயணம் செய்த இரண்டு பெண்களிடம் தீவிரமாக விசாரணை நடத்தியது காவல்துறை. இந்த விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அந்த இரண்டு பெண்கள் தான் இவரது கைப்பையை திருடி இருக்கின்றனர். மேலும் அவர்கள் இதுபோன்று பல பெண்களிடமும் கைவரிசை காட்டி இருப்பது தெரிய வந்திருக்கிறது. அதே பேருந்தில் இன்னொரு பெண்ணிடமும் திருடியுள்ளனர். காவல்துறையின் விசாரணையில் அந்த இரு பெண்களும் திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியைச் சார்ந்த சகோதரிகள் என தெரிய வந்திருக்கிறது. அழகு கலை நிபுணராக திருச்சியில் செயல்பட்டு வரும் பியூட்டி பார்லரில் இருவரும் வேலை செய்து இருக்கின்றனர். இவர்களது முழு நேர தொழிலே திருடுவது தான். விசாரணையில் அவர்களது பெயர் பிரியா மற்றும் மது என தெரியவந்துள்ளது. காலையில் வேலைக்கு செல்வது போல் செல்லும் இவர்கள் பிக் பாக்கெட் அடிப்பதை தொழிலாக செய்து வந்திருக்கின்றனர். மேலும் இவர்கள் இருவரும் ஒரே கணவனையே திருமணம் செய்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.