இரவில் அதிக வியர்வை காரணமாக சிகிச்சைபெற்றுவந்த இங்கிலாந்தை சேர்ந்த 48வயதான நபர் இரத்த புற்றுநோய் பாதித்து ஒருவருட சிகிச்சைக்கு பிறகு உயிரிழந்துள்ளார்.
இங்கிலாந்தை சேர்ந்தவர் 48 வயதான டெனே ஃபிர்த். இவர் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வருகிறார். சவுத் யார்க்ஷயர் காவல்துறையில் சொத்து எழுத்தராகப் பணிபுரிந்து வந்துள்ளார். இரவு வியர்வை மற்றும் கால் வீங்கியதால் கடந்த 2019ம் ஆண்டு மருத்துவர் ஒருவரை அணுகினார். இதையடுத்து டெனோ கடுமையான மைலோயிட் லுகேமியா (ரத்த புற்றுநோயால்) பாதிக்கப்பட்டிருப்பதாக மருத்துவர் சோதனையில் தெரியவந்தது. இருப்பினும், தன் உடல்நிலையை குணப்படுத்திவிட முடியும் என்பதில் டெனே உறுதியாக இருந்துவந்துள்ளார்.
இருப்பினும், 40 சதவீதத்திற்கும் அதிகமான புற்றுநோய் செல்கள் டெனே உடலில் இருந்ததால், ஸ்டெம் செல் மாற்று அறுவை சிகிச்சையை தொடர முடியாத நிலை ஏற்பட்டது. மூன்றாவது சுற்று கீமோதெரபிக்குச் சென்றாலும், அவர் உயிர் பிழைப்பதற்கான வாய்ப்புகள் குறைவு என்று மருத்துவர்கள் கூறினர். இறுதியில் ஒருவருட சிகிச்சைக்கு பிறகு கடந்த ஜூலை 9, 2020 அன்று டெனே உயிரிழந்தார்.