ராகுல் காந்தி ஃபிளையிங் கிஸ் கொடுத்தது அன்பின் அடையாளம் என்றும் பாஜக தலைவர்கள் ப்ளூ பிலிம் பார்த்த போது எங்கே போனீர்கள் என்றும் காயத்ரி ரகுராம் விளாசியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்க்கட்சிகள் கொண்டு வந்துள்ளன. இந்த தீர்மானத்தின் மீது நேற்றைய தினம் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி பேசினார். அவர் எடுத்த எடுப்பிலேயே அதானி பெயரை சொல்லியதால் நாடாளுமன்றத்தில் கூச்சல் ஏற்பட்டது. இதையடுத்து, ராகுல் பேசிய போது நான் இங்கு அதானியை பற்றி பேச வரவில்லை என தனது பேச்சை ஆரம்பித்தார். மணிப்பூரில் இந்தியா பற்றி எரிகிறது. பாரததாயை கொன்றுவிட்டார்கள் என கூறி பிரதமர் அதானி, அமித்ஷா ஆகியோரின் பேச்சையே கேட்கிறார் என்றும் மணிப்பூருக்கு நான் சென்று வந்தேன். ஆனால், பிரதமர் ஏன் செல்லவில்லை என்றும் சரமாரியான கேள்விகளை எழுப்பினார்.
அப்போது அமைச்சர் ஸ்மிருதி இராணி எழுந்து பேசினார். அவர் காங்கிரஸையும் திமுகவையும் ஊழல் கட்சி என விமர்சித்தார். ராகுல் காந்தியை பேச விடாமல் செய்த போது அவர் ராஜஸ்தான் பேரணி செல்வதற்காக அவையை விட்டு கிளம்ப வேண்டிய சூழல் இருந்ததால் சபாநாயகரை பார்த்து ஃபிளையிங் கிஸ் கொடுத்துவிட்டு கிளம்பினார். இதற்கு ஸ்மிருதி இராணி கடும் கண்டனம் தெரிவித்தார். மேலும், ராகுல் ஃபிளையிங் கிஸ் கொடுத்தது குறித்து பாஜக எம்பிக்கள் சபாநாயகரிடம் புகார் அளித்தனர். இந்த சம்பவத்தை பாஜக எம்பிக்கள் ஆபாசமான சைகையாக பார்த்து வரும் நிலையில், பலர் இதை அன்பின் அடையாளமாகவே பார்க்கின்றனர்.
இந்த சம்பவத்தில் ராகுல் காந்திக்கு ஆதரவாக காயத்ரி ரகுராம் பேசியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ”நாடாளுமன்றத்தில் பெண் எம்பிக்கள் முன்பு உணர்ச்சியால் முத்தமிடும் போது இருவரையும் கண்டிக்க வேண்டும். ஆனால், ராகுல் காந்தியின் சிக்னேச்சர் ஸ்டைல் பிளையிங் கிஸ் அவர் ஒவ்வொரு பொதுக்கூட்டத்திலும் தனது உரையை முடித்ததும் இதை செய்து வருகிறார்.
இந்திய ஒற்றுமை யாத்திரையில் கூட அவர் மக்களுக்கு பிளையிங் கிஸ் கொடுத்தார். ஆனால், பாஜக தலைவர்கள் சட்டசபையில் ப்ளூ பிலிம் பார்த்து பிடிபட்டுள்ளனர். அப்போதெல்லாம் பாஜக பெண் எம்பிக்கள் ஏன் குரல் கொடுக்கவில்லை. பல பொதுக்கூட்டங்களில் பல பாஜக தலைவர்கள் பகிரங்கமாக பெண்களிடம் தவறாக நடந்து கொள்கிறார்கள். அப்போது ஏன் குரல் கொடுக்கவில்லை என காயத்ரி ரகுராம் கேள்வி எழுப்பியுள்ளார்.