செல்போனால் சமீப காலமாக பலரை பாதிக்கும் நோய் என்றால் அது செல்போனுக்கு அடிமையாவது தான். ஆம், உண்மை தான். பெற்றோர்கள் சிலர் தாங்கள் சற்று நேரம் நிம்மதியாக இருக்க வேண்டும் என்று நினைத்து குழந்தைகளிடம் செல்போனைக் கொடுத்துவிடுகின்றனர். இது போன்ற செயல்கள், உங்களுக்கு தற்போது நிம்மதியாக எந்த தொந்தரவும் இல்லாதது போல் தோன்றலாம். ஆனால், உங்களின் இந்த செயலால் நீங்கள் வாழ்க்கை முழுவதும் துயரத்தை சந்திக்க நேரிடும் என்பதை மறந்துவிடாதீர்கள். இதற்க்கு உதாரனமாக தற்போது நடந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ராணிப்பேட்டை அரக்கோணம் அருகே உள்ள காலிவாரி கண்டிகை பகுதியை சேர்ந்தவர் 18 வயதான கல்லூரி மாணவர். சென்னையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி ஒன்றில் முதலாம் ஆண்டு பி.இ படித்து வந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, மாணவனின் தந்தை உயிரிழந்துள்ளார். இதையடுத்து, வெளிநாட்டில் வேலை செய்யும் இவரது அண்ணன் மாணவனுக்கு அவ்வப்போது பணம் அனுப்பி வைத்துள்ளார். அந்த பணத்தை வைத்து மாணவனின் தாய், குடும்ப செலவுகளை கவனித்துள்ளார்.
இந்நிலையில், வீட்டில் தனியாக இருந்த மாணவன் செல்போன் மற்றும் கணினியில் விளையாட ஆரம்பித்துள்ளார். பின்னர் அதற்க்கு அடிமையான மாணவன், இரவும் பகலும் விடாமல் விளையாடி கொண்டிருந்துள்ளார். பின்னர், திடீரென நேற்று வெறி பிடித்தது போல் அவரது தாயுடன் பேசியுள்ளார். மேலும், அவரது தாயை அடிக்க முயற்சி செய்துள்ளான். இதனால் அதிர்ச்சி அடைந்த தாய், தனது மகனின் கையைக் கட்டி மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்.
ஆனால், மருத்துவமனையிலும் தனக்கு எதிரே இருந்தவர்களை ஆபாசமாக பேசி, தாக்க முயற்சி செய்ததால், மருத்துவர்கள் மாணவனுக்கு முதலுதவி மட்டும் அளித்து மேல் சிகிச்சைக்கு கீழ்பாக்கம் மன நல மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால், மாணவன் ஆம்புலன்ஸில் ஏறிய பின்பும் தனக்கு எதிரே இருந்தவர்களை அநாகரியமாக பேசி சத்தம் போட்டுள்ளார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது..