நடிகர் மிர்ச்சி சிவா, பிரியா ஆனந்த், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்திருக்கும் படம் தான் ”காசேதான் கடவுளடா”. இப்படத்தை ஆர். கண்ணன் என்பவர் இயக்கி தயாரித்திருக்கிறார். இப்படம் மார்ச் 24 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நாள் நிகழ்ச்சி, அதாவது செய்தியாளர் சந்திப்பு நிகழ்ச்சி வடபழனி பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில் இயக்குனர் ஆர் கண்ணன், நடிகர் சிவா, தயாரிப்பாளர் கே.ராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அப்போது மேடையில் பேசிய கே.ராஜன், இன்றைக்கு மக்களின் மனம் எப்படி இருக்கும் என்று புரியவே இல்லை. எந்த படத்தை ஏற்று கொள்வார்கள் எந்த படத்தை ஒதுக்கி தள்ளுவார்கள் என்று தெரியவில்லை. ஆனால், மக்கள் நல்ல படத்தை ஏற்று கொள்கிறார்கள் என்பதற்கு உதாரணம் லவ் டுடே. இப்படத்தை மாணவர்கள், இளைஞர்கள் என அனைவருமே ஏற்று கொண்டார்கள். பல பேர் ஆடியோ நிகழ்ச்சி வந்தால் மரியாதை குறைந்து விடும் என நினைக்கின்றனர். முதலில் தயாரிப்பாளரை மதிக்க தெரிய வேண்டும். இயக்குனரை வணங்க தெரிய வேண்டும். இயக்குநர் இல்லாமல் யாரும் இல்லை. அதேபோல் முதலில் ஒரு படத்திற்கு கதை தான் முக்கியம், பிறகு தான் ஹீரோ. நாயை போட்டு கூட படத்தை ஓட்டி விடலாம். அதற்கு உதாரணம் ராமநாராயணன் எடுத்த படங்கள். அவர் 28 நாளில் எடுத்து 100 நாட்கள் ஓடிய படம் மட்டுமே 78.
அப்படி இருக்கும் போது இன்னும் 3 ஆண்டுகளுக்கு இயக்குனர் ஆர்.கண்ணன் படங்களுக்கான கதைக்களத்தை திட்டமிட்டு உருவாக்க வேண்டும். ஹீரோவை மனதில் வைத்து கதை உருவாக்கினால் நிச்சயம் தோல்விதான். அதனால், எதையும் திட்டமிட்டு செய்யுங்கள் என்று கூறினார். அதே வேளையில், மறைமுகமாக இயக்குநர் அட்லீ குறித்தும் கடுமையாக விமர்சித்தார். பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடித்து வெளிவந்த படம்தான் சக் தே இந்தியா திரைப்படம். ஹாக்கியை மையமாக வைத்து உருவான கதை. இந்த கதையை மையமாக வைத்துதான் பிகில் என்கிற பெயரில் அட்லீ படம் எடுத்துள்ளார். அதுல ஹாக்கி, இதுல கால்பந்து அவ்வளவுதான் வித்தியாசம். தயாரிப்பாளரை எட்டி எட்டி உதைத்துவிட்டார். ஏஜிஎஸ் பெரிய கம்பெனி என்பதால் அப்படத்தை சமாளித்தார்கள். 5 ஆயிரம் ஜூனியர் ஆர்டிஸ்ட்டுகளை நடிக்க வைத்துவிட்டு அதுல 10 சதவீதம் கமிஷன் வாங்கி உள்ளார் இயக்குனர்.
தயாரிப்பாளர்களிடம் 30 கோடி, 40 கோடினு சம்பளம் வாங்கிட்டு ஜூனியர் ஆர்டிஸ்ட் சம்பளத்தில் 10% கமிஷன் வேற வாங்குறது. இப்படி நியாயமே இல்லாமல் சம்பாதிக்கும் பணமெல்லாம் நிக்குமா? என்று கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார் கே.ராஜன்.