மாணவர்களுக்கு இடையேயான சண்டையை தடுத்த பள்ளி முதல்வரை, மாணவன் ஒருவன் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் சீதாபூரின் பள்ளியொன்றில் 12ஆம் வகுப்பு படிக்கும் சக மாணவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அப்போது, அங்கு வந்த பள்ளி முதல்வர் ராம் சிங் வர்மா, சண்டையிட்டுக் கொண்டிருந்த மாணவர்களைச் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தார். அப்போது, பிளஸ்2 மாணவன் ஒருவனைப் பள்ளி முதல்வர் திட்டியதாகச் கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த அந்த மாணவன், தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து பள்ளி முதல்வரை சுட்டுள்ளான். துப்பாக்கியால் சுட்டதில் வலி தாங்க முடியாமல், முதல்வர் மயங்கி விழுந்தார். இதையடுத்து, அங்கிருந்த மாணவர்களும் பயத்தில் ஓட்டம் பிடித்தனர்.
![சண்டையை தடுத்த பள்ளி முதல்வரை துப்பாக்கியால் சுட்ட பிளஸ்2 மாணவன்..!! பயங்கர சம்பவம்..!](https://1newsnation.com/wp-content/uploads/2020/03/gun-fire-1.jpg)
பின்னர், இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், காயமடைந்த பள்ளி முதல்வரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால், அவரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில், தொடர்புடைய மாணவர்கள் தலைமறைவாகி விட்டனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.