சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பதவியேற்பு விழாவுக்கு பின்னர், தமிழகத்தின் 13-வது முதலமைச்சராக பதவியேற்ற விஜய் நேரடியாக தலைமைச் செயலகத்திற்குச் சென்றார். அங்கு அவருக்கு காவல்துறை சார்பில் மரியாதை அளிக்கப்பட்டது. தொடர்ந்து முதல்வர் அறைக்கு சென்ற விஜய், முதல்வர் நாற்காலியில் அமர்ந்து அதிகாரப்பூர்வ பணிகளை தொடங்கினார்.
இதற்கிடையில், முதல்வரின் தனிச் செயலாளராக பி. செந்தில் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளராக இருந்தவர். அதேபோல், முதல்வரின் தனிச் செயலாளர் – 2 ஆக ஜி. லட்சுமி பிரியா ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஆதிதிராவிடர் நலத்துறை செயலாளராக பணியாற்றி வந்தவர்.
பொதுவாக தமிழக முதலமைச்சருக்கு 3 தனிச் செயலாளர்கள் நியமிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் தற்போது இரண்டு முக்கிய அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், தனிச் செயலாளர் – 3 விரைவில் நியமிக்கப்படலாம் என கூறப்படுகிறது. மேலும், இவர்களுக்கு துறைகள் ஒதுக்கீடும் பின்னர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவர்கள் இருவரும் பதவியேற்ற நாளிலிருந்து ஓராண்டு காலத்திற்கு முக்கிய பொறுப்புகளில் செயல்படுவார்கள் என கூறப்படுகிறது. முன்னதாக திமுக ஆட்சியில் முதலமைச்சர் ஸ்டாலினின் தனிச் செயலாளர்களாக உதயசந்திரன், சண்முகம் மற்றும் அனு ஜார்ஜ் ஆகியோர் நியமிக்கப்பட்டிருந்தனர். பின்னர் உதயசந்திரன் நிதித்துறைக்கு மாற்றப்பட்ட நிலையில், அவரது இடத்தில் உமாநாத் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டிருந்தார்.
இதற்கிடையில், தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜயை சட்டசபை செயலாளர் சீனிவாசன் மற்றும் பல்வேறு ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் நேரில் சந்தித்து பூங்கொத்து வழங்கி வாழ்த்து தெரிவித்தனர். அதிகாரிகள் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்ட நிலையில், விஜயும் அவர்களுடன் கலந்துரையாடினார்.



