ஈரான் மீது புதிய தாக்குதல் நடவடிக்கை குறித்து அமெரிக்கா பரிசீலித்து வரும் சூழலில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்ட ஒரு சமூக வலைதள பதிவு சர்வதேச அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அவர் பகிர்ந்த புகைப்படம் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டது. அதில் கொந்தளிக்கும் கடலில் பல போர் கப்பல்கள் முன்னேறிச் செல்லும் காட்சி இடம்பெற்றுள்ளது. அந்த கப்பல்களில் ஈரானின் தேசிய கொடிகள் பறப்பதாகவும், முன்புறத்தில் டிரம்ப் கேமராவை நோக்கி சுட்டிக்காட்டும் நிலையில் இருப்பதாகவும் காட்சி அமைக்கப்பட்டுள்ளது.
அந்த பதிவுடன் “புயலுக்கு முந்தைய அமைதி” என்ற வாசகத்தையும் அவர் இணைத்துள்ளார். அருகில் அமெரிக்க கடற்படை அதிகாரி ஒருவர் இருப்பது போன்ற காட்சியும் இடம்பெற்றுள்ளது. ஈரானின் அணுசக்தி திட்டம் தொடர்பாக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து மேற்கொள்ளும் நடவடிக்கைகள் காரணமாக தற்போதைக்கு தற்காலிக போர் நிறுத்த சூழல் நிலவுகிறது.
இருப்பினும், அமைதிப் பேச்சுவார்த்தைகள் வெற்றியடையாத பட்சத்தில் மீண்டும் தாக்குதல் நடத்தும் வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. டிரம்பின் இந்த பதிவு உலக அரசியலில் புதிய விவாதத்தை உருவாக்கியுள்ளது. சிலர் இதை ஈரானுக்கு விடுக்கப்பட்ட மறைமுக எச்சரிக்கையாகக் கருதுகின்றனர். மற்றொரு தரப்பினர் இதை உளவியல் அழுத்த நடவடிக்கையாகவே பார்க்கின்றனர்.
இதற்கிடையில், ஈரான் பாராளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். எந்தவித தாக்குதலுக்கும் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் எனவும், எதிரிகள் எதிர்பாராத அளவுக்கு பதிலடி இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா–இஸ்ரேல் கூட்டணியின் அழுத்தம் தொடரும் நிலையில், டிரம்பின் இந்த பதிவு மேற்காசிய பிராந்தியத்தில் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது. அமைதிப் பேச்சுவார்த்தைகள் வெற்றி பெறுமா அல்லது மீண்டும் மோதல் வெடிக்குமா என்ற கேள்வி உலக நாடுகளை உற்றுநோக்க வைத்துள்ளது.



