தமிழக அரசியல் வரலாற்றில் முதன்முறையாக திராவிடக் கட்சிகளின் கோட்டையை தகர்த்து விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது.. முதல் தேர்தலிலேயே இவ்வளவு பெரிய வெற்றி என்பது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தி உள்ளது. வாக்கு எண்ணிக்கை முடிவில் தவெக 107 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.. ஆளுங்கட்சியான திமுக 74 இடங்களிலும் அதிமுக 53 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது.
இந்த நிலையில், தமிழக சட்டசபை தேர்தலில் 108 இடங்களில் வென்றுள்ள நிலையில் ஆட்சியமைக்க அழைப்பு விடுக்க கோரி தமிழக கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருக்கு தவெக தலைவர் விஜய் மின்னஞ்சல் மூலம் கடிதம் அனுப்பி உள்ளார். 2 வாரங்களில் பெரும்பான்மையை நிரூபிக்க தயார் என கடிதத்தில் தவெக கூறியுள்ளது.
மின்னஞ்சல் மூலம் ஆளுநருக்கு கடிதம் அனுப்பிய நிலையில் ஆளுநர் விரைவில் சென்னை திரும்புவார் என எதிர்பார்க்கபடுகிறது. சென்னை திரும்பும் ஆளுநர் அதிகாரிகள் மற்றும் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
த.வெ.க. பெரும்பான்மைக்கு கூடுதலாக 11 இடங்கள் தேவைப்படுகிறது. எனவே தி.மு.க. கூட்டணியில் உள்ள காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகள், தே.மு.தி.க. மற்றும் அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள பா.ம.க. ஆகியோர் விஜய்க்கு ஆதரவு அளிப்பார்கள் என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.



