அமெரிக்கா, தென் கொரியா மற்றும் ஜப்பான் நாடுகள் பங்கேற்ற ஐந்து நாள் கூட்டு ராணுவப் பயிற்சி நிறைவடைந்த சில மணி நேரங்களிலேயே, வட கொரியா பல பாலிஸ்டிக் ஏவுகணைகளைக் கடல் நோக்கி ஏவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தங்களது நாட்டின் பாதுகாப்புக்கு நேரடியாக அச்சுறுத்தலாகக் கருதப்படும் இந்த முத்தரப்புக் கூட்டுப் பயிற்சிகளுக்கு பியாங்யாங் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், இந்த ஏவுகணைத் தாக்குதல் அரங்கேறியுள்ளது.
வட கொரியாவின் கிழக்குக் கடற்கரைப் பகுதியான வொன்சான் (Wonsan) பகுதியில் இருந்து பல ஏவுகணைகள் ஏவப்பட்டதாகத் தென் கொரிய ராணுவம் கண்டறிந்துள்ளது. இந்த ஏவுகணைகள் அனைத்தும் கடல் பகுதியை நோக்கி வீசப்பட்டதைத் தொடர்ந்து, சியோல் நகரில் உள்ள பாதுகாப்புத் துறை அதிகாரிகள் உளவு மற்றும் கண்காணிப்புப் பணிகளை உடனடியாக தீவிரப்படுத்தியுள்ளனர். மேலும், அமெரிக்கா மற்றும் ஜப்பான் நாட்டு ராணுவத்துடன் தொடர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ள தென் கொரியா, ஏவுகணை விவரங்கள் குறித்துத் தகவல்களைப் பகிர்ந்து வருகிறது.
வட கொரியாவின் இந்த சமீபத்திய ஏவுகணைத் தாக்குதல் அமெரிக்காவிற்கோ அல்லது அப்பகுதியில் உள்ள அதன் நட்பு நாடுகளுக்கோ உடனடியான எந்தவித அச்சுறுத்தலையும் ஏற்படுத்தவில்லை என்று அமெரிக்க பசிபிக் கட்டளை மையம் (US Pacific Command) தெரிவித்துள்ளது. இருப்பினும், தனது தாயகத்தையும் பிராந்திய கூட்டாளிகளையும் பாதுகாப்பதில் அமெரிக்கா உறுதியாக இருப்பதாக அது மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
அமெரிக்கா, தென் கொரியா மற்றும் ஜப்பான் நாடுகள் இணைந்து நடத்திய ‘பிரீடம் எட்ஜ்’ (Freedom Edge) என்ற ஐந்த நாள் கூட்டு ராணுவப் பயிற்சி அண்மையில் நிறைவடைந்த நிலையில் இந்த ஏவுகணைப் பாய்ச்சல் நடந்துள்ளது. வட கொரியாவிடம் இருந்து வரக்கூடிய சாத்தியமான அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் திறனை மேம்படுத்துவதே இந்தத் தற்காப்புப் பயிற்சி என்று தென் கொரியா விளக்கம் அளித்துள்ளது. ஆனால், இந்த முத்தரப்பு ராணுவக் கூட்டுத் திட்டத்தை வட கொரியா தனது பாதுகாப்புக்கு எதிரான அச்சுறுத்தலாகவே கருதி வருகிறது.
இப்பயிற்சி தொடங்கிய சில மணி நேரங்களிலேயே, வட கொரிய பாதுகாப்பு அமைச்சர் கிம் சோங் கி (Kim Song Gi) இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து எச்சரிக்கை விடுத்திருந்தார். தாங்கள் பலத்தின் அடிப்படையில் கடுமையான மற்றும் உரிய பதிலடிகளைக் கொடுக்கத் தயங்க மாட்டோம் என்று அவர் எச்சரித்திருந்த நிலையில், தற்போது ஏவுகணைகளை ஏவி தனது மிரட்டலைச் செயலில் காட்டியுள்ளது கொரியா. இதனால் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.



