மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் வழங்கப்பட்டு வரும் ரூ.1,000 தொகையை எதிர்பார்த்து காத்திருந்த பெண்களுக்கு தற்போது அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்கான உரிமைத் தொகை சில பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படவில்லை என புகார்கள் எழுந்துள்ளன. இதனால், வழக்கமாக தங்களது கணக்கில் பணம் வரும் என எதிர்பார்த்திருந்த பெண்கள், தொகை வராததற்கான காரணம் தெரியாமல் குழப்பத்தில் உள்ளனர்.
தமிழக அரசின் முக்கிய நலத்திட்டங்களில் ஒன்றாக செயல்படுத்தப்பட்டு வரும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் மூலம் தகுதியான குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் தொகை குடும்பத்தின் அன்றாட செலவுகளுக்கு உதவியாக இருப்பதாகப் பல பெண்கள் தெரிவித்து வரும் நிலையில், தற்போது தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கான தொகை கிடைக்கவில்லை என்ற புகார் கவனத்தை ஈர்த்துள்ளது.
குறிப்பாக வேலூர் மாவட்டத்தில் மட்டும் 5,000-க்கும் மேற்பட்ட பயனாளிகளின் கணக்குகளில் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்கான தொகை வரவு வைக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் பெண்கள் சம்பந்தப்பட்ட அலுவலகங்களுக்குச் சென்று தங்களது குறைகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்த விவகாரம் தொடர்பாக பொதுமக்கள் நேரில் வந்து புகார் அளித்த பின்னரே, சில பயனாளிகளுக்கு உரிமைத் தொகை வரவு வைக்கப்படாதது அதிகாரிகளின் கவனத்திற்கு வந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இதுகுறித்து சென்னை தலைமையகத்தைத் தொடர்புகொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால், தங்களது பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பில் பயனாளிகள் உள்ளனர்.
இதற்கிடையில், உரிமைத் தொகை வரவு வைக்கப்படாததற்கான காரணம் என்ன என்பது குறித்து தெளிவான தகவல் வெளியாகவில்லை. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பணப் பரிமாற்றம் தாமதமானதா அல்லது நிர்வாக ரீதியான காரணங்களால் தொகை நிறுத்தப்பட்டுள்ளதா என்பது குறித்து பயனாளிகளிடையே கேள்வி எழுந்துள்ளது.
ஒருபுறம் மாதாந்திர செலவுகளுக்கு இந்தத் தொகையை நம்பியிருக்கும் பெண்கள், மறுபுறம் பணம் வராததற்கான காரணம் தெரியாமல் அதிகாரிகளை அணுகி வருகின்றனர். எனவே, மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் பயனாளிகள் தங்களது வங்கிக் கணக்கில் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்கான தொகை வரவு வைக்கப்பட்டுள்ளதா என்பதைச் சரிபார்த்துக் கொள்வது அவசியமாகியுள்ளது.
Also Read: பாக்கெட் உணவில் மறைந்திருக்கும் ஆபத்து!. கார்ப்பரேட்டுகளுக்கு அடிபணிகிறதா FSSAI!. உச்ச நீதிமன்றத்தின் சாட்டையடி!



