இன்றைய வேகமான வாழ்க்கை முறையில், பலரின் காலைப் பொழுதுகள் அமைதியாக தொடங்குவதற்குப் பதிலாக அவசரமும் மன அழுத்தமும் நிறைந்ததாக மாறிவிட்டது. கண்விழித்த உடனே கைபேசியைப் பார்க்குதல், காலை உணவைத் தவிர்த்தல், அதிக காஃபி குடித்தல், அவசர மனநிலையுடன் நாளை தொடங்குதல் போன்ற பழக்கங்கள், நீண்டகாலத்தில் மூளையின் செயல்பாட்டை பாதிக்கக்கூடும் என்று நரம்பியல் மற்றும் மனநல நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
தூக்க அறிவியல், ஊட்டச்சத்து மற்றும் உளவியல் தொடர்பான பல ஆய்வுகளின்படி, குறிப்பாக விழித்தெழுந்த முதல் சில மணிநேரங்களில் கடைப்பிடிக்கப்படும் பழக்கவழக்கங்கள், நினைவாற்றல், கவனம், உணர்ச்சி கட்டுப்பாடு மற்றும் மனநலத்தில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என கூறப்படுகிறது.
கண்விழித்தவுடன் கைபேசியைப் பார்க்கும் பழக்கம்: பலரின் நாளும் மொபைல் அறிவிப்புகளோடு தொடங்குகிறது. சமூக வலைதளங்கள், மின்னஞ்சல்கள் மற்றும் செய்திகள் ஆகியவற்றை அதிகாலையிலேயே பார்ப்பது மூளையை திடீரென அதிகத் தூண்டுதலுக்கு உள்ளாக்குகிறது என நிபுணர்கள் கூறுகின்றனர். இதனால் உடலில் மன அழுத்த ஹார்மோனான கார்டிசோல் அளவு அதிகரித்து, நாளின் தொடக்கத்திலேயே பதட்டம் மற்றும் கவனச்சிதறல் உருவாகக்கூடும். நீண்டகாலத்தில் இது நினைவாற்றல் குறைவு மற்றும் மனச்சோர்வுக்கும் வழிவகுக்கலாம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
காலை உணவை தவிர்ப்பது: சரியான தூக்கமின்றி காலை உணவைத் தவிர்ப்பது மூளைக்கு தேவையான ஆற்றலை குறைக்கக்கூடும். மூளை செயல்பட குளுக்கோஸ் முக்கியமானதாக இருப்பதால், காலை நேர உணவு தவிர்க்கப்படும் போது கவனம் மற்றும் நினைவாற்றலில் பாதிப்பு ஏற்படலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர். தொடர்ச்சியான தூக்கமின்மை மற்றும் உணவு தவிர்ப்பு இணைந்தால், அது மனநிலை மாற்றம் மற்றும் அறிவாற்றல் குறைபாடுகளுக்கு காரணமாக மாறக்கூடும்.
மன அழுத்தத்துடன் நாளை தொடங்குதல்: காலக்கெடு, வேலை அழுத்தம், நிதி பிரச்சனைகள் மற்றும் குடும்ப பொறுப்புகள் போன்ற கவலைகளுடன் நாளை தொடங்குவது, மூளையை தொடர்ந்து “அவசர நிலை” மனநிலையிலேயே வைத்திருக்கிறது. நிபுணர்களின் கூற்றுப்படி, இது நீண்டகாலத்தில் மனச்சோர்வு, எரிச்சல், கவனக்குறைவு மற்றும் உணர்ச்சி ரீதியான சோர்வை அதிகரிக்கக்கூடும். மூளைக்கு அமைதியான தொடக்கம் கிடைப்பது மிகவும் அவசியம் என மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர்.
அதிக சர்க்கரை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள்: காலையில் அதிக சர்க்கரை கலந்த உணவுகள் அல்லது பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது இரத்த சர்க்கரை அளவில் திடீர் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும். இதனால் ஆற்றல் நிலை மாறுபாடு, கவனச்சிதறல் மற்றும் மனநிலை பாதிப்பு ஏற்படலாம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து இப்படிப்பட்ட உணவுகளை உட்கொள்வது மூளையின் செயல்திறனை மெதுவாக பாதிக்கக்கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
சூரிய ஒளி மற்றும் உடல் அசைவுகளை தவிர்ப்பது: காலையில் இயற்கை சூரிய ஒளி பெறாமல் இருப்பதும், உடற்பயிற்சி அல்லது நடைப்பயிற்சி இல்லாத வாழ்க்கை முறையும் தூக்கச் சுழற்சியை பாதிக்கக்கூடும். சிறிய நடைப்பயிற்சி அல்லது உடலை நீட்டும் பயிற்சிகள் கூட மூளைக்குச் செல்லும் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, மனநிலையை சீராக வைத்திருக்க உதவுகின்றன. ஆனால் முழுமையாக வீட்டுக்குள்ளேயே இருக்கும் பழக்கம், சோர்வு மற்றும் மன மந்தநிலையை அதிகரிக்கக்கூடும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
நிபுணர்களின் கருத்துப்படி, மூளையின் ஆரோக்கியம் ஒரே நாளில் பாதிக்கப்படுவதில்லை. ஆனால் அன்றாடம் தொடர்ந்து செய்யப்படும் சிறிய தவறான பழக்கவழக்கங்கள், காலப்போக்கில் பெரிய மனநல மற்றும் அறிவாற்றல் பிரச்சனைகளாக மாறக்கூடும். எனவே, காலையில் அமைதியான தொடக்கம், சரியான தூக்கம், சீரான உணவு, உடற்பயிற்சி மற்றும் டிஜிட்டல் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துதல் ஆகியவை மூளையின் நீண்டகால ஆரோக்கியத்திற்கு முக்கியமானவை என மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர்.



