தவெக தலைவர் விஜய் தாக்கல் செய்த வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
தவெக தலைவர் விஜய் 2026 சட்டமன்ற தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என இரு தொகுதிகளில் போட்டியிட்டார். தவெக தலைவர் விஜய் வேட்பு மனுவில் முன்னுக்குப்பின் முரணான தகவல்கள் இருப்பதாக துவக்கத்தில் இருந்தே பரபரப்பு கிளம்பிய போதிலும் பரிசீலனையில் வேட்பு மனு ஏற்றுக்கொள்ளபட்டது. ஆனாலும் பெரம்பூர் தொகுதி வாக்காளர் வெங்கடேஷ் சென்னை ஐகோர்ட்டில் விஜய் வேட்பு மனுவில் முறைகேடு இருப்பதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அந்த மனுவில், விஜய் தனது குடும்ப உறுப்பினர்களுக்கும் நெருக்கமான நிறுவனங்களுடன் பெரும் தொகை கடனாக வழங்கியுள்ளதாக தனது வேட்பு மனுவில் கூறியுள்ளார். விஜய் தனது மனைவி சங்கீதாவிற்கு ரூ.12.6 கோடி கடன் வழங்கப்பட்டதாக கூறியிருப்பது, சமீபத்திய பிரச்சனைகளுக்கு மத்தியில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இத்தகைய பரிவர்த்தனைகளின் உண்மைத்தன்மை, நோக்கம் மற்றும் தன்மை குறித்து நியாயமான கேள்விகள் எழுகின்றன. எனவே இது குறித்து தேர்தல் ஆணையம் மற்றும் வருமான வரித்துறை விசாரணை நடத்த வேண்டும் என்றும், வேட்புமனுவில் உண்மை விவரங்களை மறைப்பது தேர்தல் நடைமுறையை மோசடி செய்வதை போன்றது எனவும் குறிப்பிட்டிருந்தார். இந்த மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
தலைமை நீதிபதி எஸ்.ஏ தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள் முருகன் ஆகியோர் தலைமையிலான அமர்வு, இந்த மனுவை தள்ளுபடி செய்ய உத்தரவிட்டது. இந்த கோரிக்கையுடன் தாக்கல் செய்த வழக்கு தள்ளுபடியானதால், இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்க முடியாது என நீதிபதிகள் தெரிவித்தனர்.
Read more: NEET UG 2026: நீட் தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு.. ஆன்லைனில் டவுன்லோட் செய்வது எப்படி..?



