தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சூழலில், தவெக அமைச்சரவையில் அதிமுகவினர் இடம்பெற வாய்ப்பு உள்ளதா என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் தீவிரமாக பேசப்பட்டு வருகிறது.
சட்டமன்ற தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் விஜய் தலைமையிலான தவெக அரசு ஆட்சியமைத்தது. அதே நேரத்தில், அதிமுக மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டதால் கட்சிக்குள் அதிருப்தியும் பிளவுகளும் அதிகரித்தன. குறிப்பாக, சட்டமன்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் வேலுமணி ஆதரவு எம்எல்ஏக்கள் தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்ததையடுத்து, அதிமுகவின் சில முக்கிய தலைவர்கள் அமைச்சரவையில் சேர்க்கப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில், கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தவெக அமைச்சர் செங்கோட்டையன் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது அவர் கூறுகையில், “முதலமைச்சர் தான் முடிவு செய்வார். அவர் நினைப்பதை நாங்கள் நிறைவேற்றுவோம். ஊழல் இல்லாத ஆட்சியை எப்படி வழங்கப் போகிறோம் என்பதை பொறுத்திருந்து பாருங்கள்” என்றார்.
மேலும் பேசிய அவர், “முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவும் ஆரம்பத்தில் குறைந்த எண்ணிக்கையிலான அமைச்சர்களை மட்டுமே நியமித்தார். பின்னர் படிப்படியாக அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. அதுபோலத்தான் தற்போதைய தவெக ஆட்சியும் செயல்படும்” என தெரிவித்தார்.
அதிமுகவின் தற்போதைய நிலை குறித்தும் கடுமையாக விமர்சித்த செங்கோட்டையன், “புரட்சித் தலைவர் உருவாக்கி, புரட்சித் தலைவி கட்டிக்காத்த அதிமுக இன்று எடப்பாடி பழனிசாமியால் வலுவிழந்துள்ளது. ‘நான் ஒருவன் இருந்தால் போதும்’ என்ற எண்ணம் கட்சியை இந்த நிலைக்கு கொண்டு வந்துள்ளது. காலம் அவருக்கு பதில் சொல்லும்” என்று கூறினார்.
முதலமைச்சர் விஜயை புகழ்ந்த அவர், “நெருக்கடிகளை சமாளிக்கும் திறமை அவருக்கு உள்ளது. தமிழ்நாட்டின் நிரந்தர முதலமைச்சராக அவர் இருப்பார். ஆட்சிக்கு வந்து சில நாட்களே ஆன நிலையில் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. 200 யூனிட் இலவச மின்சாரம், மகளிர் பாதுகாப்பு, போதை ஒழிப்பு நடவடிக்கைகள் ஆகியவை தொடங்கப்பட்டுள்ளன. கோயில்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. மக்கள் இதை வரவேற்றுள்ளனர்” என்றார்.
இறுதியாக, “தவெக அமைச்சரவையில் அதிமுக இடம்பெறுமா?” என்ற கேள்விக்கு பதிலளித்த செங்கோட்டையன், “நீங்கள் தான் சொல்ல வேண்டும். நாங்கள் இதுவரை எதுவும் சொல்லவில்லை” என்று கூறினார். இந்த பதில் அரசியல் வட்டாரங்களில் புதிய விவாதத்தை கிளப்பியுள்ளதுடன், அதிமுகவில் வேலுமணி மற்றும் சி.வி. சண்முகம் அணியினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Read more: தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும்.. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்..!



