சாம்பார், பருப்பு, காய்கறி போன்ற உணவுகளுக்கு மணமும் சுவையும் சேர்க்கும் பெருங்காயத்தின் தரம் குறித்து தற்போது கவனம் திரும்பியுள்ளது. சந்தையில் விற்பனை செய்யப்படும் சில பெருங்காயப் பொடிகளில், உண்மையான பெருங்காயத்தின் அளவைவிட கலப்படப் பொருட்கள் அதிகமாக இருக்கலாம் என்ற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெருங்காயப் பொடியில் கலப்படம் தொடர்பாக உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) சமீபத்தில் முக்கிய நடவடிக்கை எடுத்துள்ளது. தரநிலைக்கு உட்படாத மற்றும் தவறாக லேபிள் செய்யப்பட்ட கலவை பெருங்காயப் பொடிகளை விற்பனை செய்ததாக சில முன்னணி நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஆய்வகப் பரிசோதனையில், சில பெருங்காய மாதிரிகளில் ஆல்கஹாலில் கரையும் சாறு அளவு 0 முதல் 4.4 சதவீதம் வரை மட்டுமே இருந்தது. ஆனால், விதிமுறைகளின்படி இந்த அளவு குறைந்தபட்சம் 5 சதவீதமாக இருக்க வேண்டும்.
மேலும், மூலப் பெருங்காய மாதிரிகளில் மாவுச்சத்து அளவு 15 முதல் 32 சதவீதம் வரை இருந்ததாக மத்திய அரசின் பத்திரிகை தகவல் பணியகத்தின் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. பெருங்காயத்தில் அனுமதிக்கப்பட்ட மாவுச்சத்து அளவு 1 சதவீதம் மட்டுமே என்பதால், இந்த ஆய்வு முடிவுகள் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளன.
இந்த நிலையில், வீட்டிலேயே சுத்தமான பெருங்காயப் பொடியை தயாரிக்க முடியுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதுதொடர்பாக சமையல் கலைஞரும் உணவு தொடர்பான உள்ளடக்கங்களை உருவாக்குபவருமான உமா ரகுராமனின் வீடியோ சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது.
அவரது செய்முறைப்படி, கடையில் கிடைக்கும் பொடியை வாங்குவதற்குப் பதிலாக பெருங்காயக் கட்டியை வாங்கி, அதை வீட்டிலேயே பொடியாகத் தயாரித்து வைத்துக்கொள்ளலாம். இவ்வாறு தயாரித்த பெருங்காயத்தை சுத்தமான, உலர்ந்த மற்றும் வாசனையற்ற காற்றுப் புகாத டப்பாவில் சேமித்தால் சுமார் ஒரு வருடம் வரை பயன்படுத்த முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதே நேரத்தில், உணவுப் பொருட்களின் தரத்தை உறுதி செய்ய நம்பகமான தயாரிப்புகளைத் தேர்வு செய்வதும், பேக்கெட்டில் இடம்பெற்றுள்ள FSSAI விவரங்கள் மற்றும் தயாரிப்பு லேபிளை சரிபார்ப்பதும் முக்கியம்.
Also Read: சொத்தை பல் வலியை உடனே போக்கும் அற்புத வைத்தியம்..! தினமும் பராமரிப்பது எப்படி..?



