நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், அதனை எதிர்கொள்ள அனைத்து அரசியல் கட்சியினரும் தயாராகி வருகின்றன. தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலுக்கு அமைத்த கூட்டணியை வைத்தே நாடாளுமன்ற தேர்தலையும் திமுக எதிர்கொள்ள திட்டமிட்டுள்ளது. இதற்கிடையே, பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்த அதிமுக, இனி எந்த தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று அறிவித்துவிட்டது.
இந்நிலையில், அதிமுக தலைமையில் புதிய கூட்டணி அமைக்கப்படும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இந்நிலையில் திமுக மற்றும் பாஜகவை கடுமையாக விமர்சித்துப் பேசும்படி, மாவட்ட செயலாளர்களுக்கும், டிவி விவாதங்களில் பங்கேற்கும் ஊடகவியலாளர்கள் மற்றும் ஐடி விங் நிர்வாகிகளுக்கும் எடப்பாடி பழனிசாமி ரகசிய உத்தரவு பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.
அதேநேரத்தில் பாமக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளை விமர்சிக்க வேண்டாம் என்றும் கூறியுள்ளதாக தெரிகிறது. ஏனென்றால், திமுக கூட்டணியில் பாமக இணையும் பட்சத்தில் விசிக வெளியேறி அதிமுக பக்கம் வர வாய்ப்புள்ளது. காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளும், தொகுதி பங்கீட்டில் அதிருப்தி உருவாகும் பட்சத்தில் அணி மாறும் நிலை ஏற்படலாம். பாமக எடுக்க போகும் முடிவை பொறுத்து தான் அணி மாற்றத்திற்கு வழி கிடைக்கும். எனவே, அக்கட்சியின் முடிவு தெரியும் வரை திமுக – பாஜகவை தவிர, மற்ற கட்சிகளை விமர்சிக்க வேண்டாம் என எடப்பாடி பழனிசாமி தடை அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.