மெரினா கடலுக்குள் பேனா நினைவுச் சின்னம் அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை மெரினா கடற்கரையில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவிடத்திற்கு அருகில் கடலுக்குள் 134 அடி உயரத்தில் பேனா வடிவ நினைவுச் சின்னம் அமைக்கப்படுகிறது. சுமார் ரூ.80 கோடி செலவில் அமைக்கப்படவுள்ள இந்த நினைவுச் சின்னத்திற்கு, சென்றடையும் வகையில் 290 மீட்டர் தூரத்திற்கு கடற்கரையிலும், 360 மீட்டர் தூரத்திற்கு கடலிலும் என 650 மீட்டர் தொலைவிற்கு பாலம் அமைக்கப்படவுள்ளது. இந்த திட்டத்திற்கு அனுமதி கோரி தமிழ்நாடு பொதுப்பணித்துறை சமர்ப்பித்திருந்த விண்ணப்பத்தை கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் பரிசீலித்து ஒப்புதல் வழங்கியது.
![மெரினா கடலுக்குள் பேனா நினைவுச் சின்னம்..! மத்திய அரசு அனுமதி..! அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன..?](https://1newsnation.com/wp-content/uploads/2022/09/Karunanidhi-1-1024x639.jpg)
இந்நிலையில் இந்த திட்டத்திற்கு மத்திய அரசு முதல் கட்ட அனுமதியை வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பொதுமக்களிடம் இந்த திட்டத்திற்காக கருத்துகளை கேட்ட பின்னர், மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் சுற்றுச்சூழல் அனுமதியைப் பெற்று அடுத்த கட்ட பணியை தொடங்கலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.