பிரிட்டன் வரலாற்றில் 70 ஆண்டுகாலம் மகாராணியாக ஆட்சிபுரிந்த எலிசபெத் காலமானார். அவருக்கு வயது 96.
1952ஆம் ஆண்டு தனது தந்தையின் மறைவுக்குப் பின் ஆட்சி பொறுப்பேற்ற ராணி எலிசபெத் இந்தியாவுக்கு பலமுறை வந்துள்ளார். பிரிட்டன் நாட்டின் காலனி ஆதிக்கத்தில் இருந்து 1947ஆம் ஆண்டு இந்தியா விடுதலை பெற்றது. அதன்பிறகு 15 ஆண்டுகள் கழித்து தான் எலிசபெத் முதல்முறையாக இந்திய வந்துள்ளார். 1961ஆம் ஆண்டு தனது கணவர் பிலிப்புடன் இந்தியா வந்த எலிசபெத் தாஜ்மகால், ராஜ்காட்டில் உள்ள அன்னல் காந்தி சமாதி ஆகியவற்றை பார்வையிட்டார். அத்துடன் காந்தி சமாதியில் தனது வருகையை அங்குள்ள பதிவேட்டில் குறிப்பிட்டு கையெழுத்து இட்டார். பின்னர் மும்பை, பெங்களூரு, சென்னை, கொல்கத்தா ஆகிய நகரங்களுக்கும் சென்றுள்ளார்.
![மறைந்த எலிசபெத் ராணி இந்தியாவில் சுற்றிப்பார்த்த இடங்கள் எது தெரியுமா? சுவாரஸ்ய தகவல்..!](https://1newsnation.com/wp-content/uploads/2022/09/ELIE-1024x768.jpg)
வாரணாசி சென்ற ராணி, அங்கு யானை சவாரி செய்து பனாரஸ் ராஜாவின் அரண்மனையில் தங்கினார். பின்னர் உதய்பூர் அரண்மனைக்கு தனது கணவருடன் சென்று தங்கினார். அத்துடன் 1961 குடியரசு தின நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். 1961ஆம் ஆண்டுக்குப் பின் 1983இல் தனது கணவருடன் மீண்டும் இந்தியா வந்தார் ராணி எலிசபெத். அன்றைய குடியரசுத் தலைவர் கியானி ஜெயில் சிங் அழைப்பை ஏற்று ஜனாதிபதி மாளிகையில் தங்கிய எலிசபெத், அன்னை தெரசாவை சந்தித்து அவருக்கு மரியாதை செலுத்தினார்.
![மறைந்த எலிசபெத் ராணி இந்தியாவில் சுற்றிப்பார்த்த இடங்கள் எது தெரியுமா? சுவாரஸ்ய தகவல்..!](https://1newsnation.com/wp-content/uploads/2022/09/Tamil_News_large_3118211.jpg)
தனது 3ஆவது பயணமாக நாட்டின் 50ஆவது சுதந்திர தின விழா ஆண்டான 1997இல் இந்தியா வருகை தந்தார். அப்போது அமிரிஸ்தரில் உள்ள ஜாலியன்வாலா பாக் நினைவிடத்தில் சென்று அஞ்சலி செலுத்தி அந்த வரலாற்று துயரத்திற்கு வருத்தம் தெரிவித்தார். பின்னர் கமல்ஹாசனின் கனவு படமான ’மருதநாயகம்’ படத்தின் செட்கள் இருந்த சென்னை எம்ஜிஆர் பிலிம் சிட்டிக்கு வருகை தந்து சுமார் 20 நிமிடம் அங்கு செலவிட்டார் ராணி எலிசபெத். இதுவே ராணி எலிசபெத் இந்தியா வந்த கடைசி பயணம் ஆகும்.