சென்னை திருவான்மியூரில் கலாஷேத்ரா அறக்கட்டளையின் கீழ் செயல்பட்டு வரும் ருக்மினி தேவி நுண்கலை கல்லூரியில் நடனம் போன்ற கலைகள் பயிற்றுவிக்கப்பட்டு வருகின்றன. இங்கே மாணவியர்களுக்கு பேராசிரியர் பாலியல் ரீதியாக தொந்தரவு வழங்கியதாக புகார் எழுந்திருக்கிறது.
இந்த புகாரை அடிப்படையாகக் கொண்டு, விசாரணை நடத்தப்பட்டது தொடர்பாக தமிழக டிஜிபிக்கு அனுப்பிய நோட்டீசை தேசிய மகளிர் ஆணையம் வாபஸ் பெற்றது. அதன் பிறகு கல்லூரியின் திடீர் விசாரணை நடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தல் எதுவும் நடைபெறவில்லை என்று தேசிய மகளிர் ஆணைய குழு அறிக்கை ஒன்றை வழங்கியது.
இதனை தொடர்ந்து, குற்றம் சுமத்தப்பட்ட பேராசிரியர் மீது நடவடிக்கை மேற்கொள்வதில் அலட்சியம் காட்டப்படுகிறது என்று தெரிவித்து கல்லூரி வளாகத்திலேயே மாணவிகள் போராட்டத்தில் குதித்தனர். இதற்கு நடுவே ருக்மணி தேவி நுண்கலை கல்லூரிக்கு ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி வரையில் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
இத்தகைய சூழ்நிலையில், கலாஷேத்ரா அறக்கட்டளை சார்பாக இயங்கி வரும் ருக்மணிதேவி நுண்கலைக்கல்லூரி மாணவர்கள் அமைப்பு சார்பாக மத்திய கலாச்சார துறை அமைச்சகம் மற்றும் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்டோருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
இந்த கடிதத்தில் கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கு பேராசிரியர் உள்ளிட்ட 4 பேர் பாலியல் துன்புறுத்தல் வழங்கி வருவதாகவும் அவர்களை கல்லூரி இயக்குனர் ரேவதி ராமச்சந்திரன் மற்றும் நடன துறையின் தலைவர் உள்ளிட்டோர் காப்பாற்றி வருகிறார்கள் என்றும் அவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்சமயம் மாணவ, மாணவிகள் போராட்டம் நடத்துகின்ற சூழ்நிலையில் மாணவர்கள் சங்கம் உருவாக்கப்பட்டு இருப்பதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளும் வரையில் போராட்டம் தொடரும் என்றும் அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. மேலும் மின்னஞ்சல் மூலமாக அந்த கடிதம் அனுப்பப்பட்டிருக்கிறது என்று தெரிவிக்கப்படுகிறது.