காரில் சென்ற பெண்களை வழிமறித்து சிலர் அச்சுறுத்திய விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், ”சென்னை ஈ.சி.ஆர். சாலையில், காரில் சென்ற பெண்களை திமுக கொடி பொருத்திய காரில் வந்த சிலர், அச்சுறுத்தும் வகையில் சினிமா காட்சிகளைக் காட்டிலும் கொடூரமான முறையில் தாக்குதல் நடத்த முயன்ற காட்சி நெஞ்சை பதைக்க வைக்கிறது. அவர்களிடம் இருந்து தப்பித்த பெண்களை, வீட்டு வரை துரத்தி சென்றுள்ளனர்.
வீட்டில் இருந்த உறவினர்களும், அக்கம்பக்கத்தினரும் அங்கு கூடியதால் அவர்கள் தப்பிச்சென்றுள்ளனர். இது குறித்து புகாரளித்தால் ‘இரவு நேரத்தில் உங்களை யார் வெளியே போகச்சொன்னது’ என்று காவல்துறையினர் கேட்டதாகவும் பாதிக்கப்பட்டோர் கூறுகின்றனர். பெண்கள் இரவு நேரத்தில் நடமாடும் சுதந்திர உரிமை கூட பறிக்கப்பட்டிருக்கிறதா.?
பெண்களை இப்படி கொடூரமாக வழிமறித்து தைரியமாக தாக்க முயலும் அளவிற்கு தமிழ்நாட்டின் சட்டம் – ஒழுங்கை திமுக அரசு அடியோடு கெடுத்து வைத்துள்ளது. இந்த வழக்கில், நேர்மையாக வழக்குப்பதிவு செய்து, பாதிக்கப்பட்டோரின் விவரம் லீக் ஆகாததை உறுதி செய்து, இக்குற்றத்தில் தொடர்புள்ள அனைவரையும் கைது செய்து, உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
Read More : விஜய் கட்சியில் ஐக்கியமாகும் ஆதவ் அர்ஜுனா..!! தவெகவின் புதிய தேர்தல் ஆலோசகர் இவர் தானாம்..!!