அதிமுகவில் உள்கட்சி மோதல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், எடப்பாடி பழனிசாமி மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக கட்சி தோல்வியடைந்து மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது. அக்கட்சியின் சார்பில் 47 எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே வெற்றி பெற்ற நிலையில், கட்சிக்குள் எடப்பாடி பழனிசாமி தலைமையின் மீது அதிருப்தி அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், சி.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் தலைமையில் 25 எம்.எல்.ஏ.க்கள் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர். இதற்கிடையில், முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு மீது நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில், எடப்பாடி பழனிசாமி தரப்பு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் தவெக அரசுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சி.வி.சண்முகம், “25 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளோம்.. இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி சில கருத்துகளை தெரிவித்துள்ளார். ‘நான் நியமித்த கொறடாவின் உத்தரவை மீறி வாக்களித்துள்ளனர்’ என அவர் கூறுவது முற்றிலும் தவறானது” என்று தெரிவித்தார்.
மேலும், “சட்டமன்ற கொறடாவை பொதுச்செயலாளர் ஒருவர் நேரடியாக நியமிக்க முடியாது. முதலில் சட்டமன்ற குழு கூட்டம் நடத்தப்பட வேண்டும். அந்தக் கூட்டத்தில் தலைவர், துணைத்தலைவர், கொறடா ஆகியோர் தேர்வு செய்யப்பட வேண்டும். இதுதான் நடைமுறை. ஆனால் எடப்பாடி பழனிசாமி, ‘நான் நியமித்தேன்’ என கூறுகிறார். அது சட்ட ரீதியாக தவறானது” என சி.வி.சண்முகம் விளக்கம் அளித்தார்.
அதோடு, “எடப்பாடி பழனிசாமி, 47 எம்.எல்.ஏ.க்களின் கையெழுத்துடன் தான் சட்டமன்ற தலைவராக தேர்வு செய்யப்பட்டதாக கூறுகிறார். அப்படியானால் அந்தக் கூட்டம் எப்போது நடந்தது? எங்கு நடந்தது? அதற்கான நோட்டீஸ் எங்கே?” என்று கேள்வி எழுப்பினார். “நாங்கள் சந்தித்த ஒரு சாதாரண கூட்டத்தின் புகைப்படத்தை காட்டி கூட்டம் நடந்ததாக கூறுகின்றனர். ஆனால் அதற்கான அதிகாரப்பூர்வ ஆதாரம் எதுவும் இல்லை” என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
மேலும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், “பாண்டிச்சேரியில் எம்.எல்.ஏ.க்கள் தங்க வைக்கப்பட்டிருந்தபோது, ‘நான் மேலே பேசிவிட்டேன். அங்கு சம்மதம் சொல்லிவிட்டார்கள். நாம் ஆட்சியமைக்கிறோம். நான் முதலமைச்சராகிறேன். திமுக வெளியிலிருந்து ஆதரவு தரும்’ என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.
திமுகவினர் முதல்வராக திருமா பெயரை முன்மொழிந்ததாகவும், எடப்பாடி பழனிச்சாமி அதை நிராகரித்ததாகவும் அவர் குற்றம் சாட்டினார். எடப்பாடி பழனிச்சாமி இவ்வாறு கூறியது முழுக்க முழுக்க உண்மை.. நான் பெற்ற பிள்ளை மீது சத்தியம் செய்து சொல்கிறேன். எடப்பாடி பழனிச்சாமியால் சத்தியம் செய்ய முடியுமா என்றார். தேர்தலுக்கு பிறகு திமுக – அதிமுக இடையே ரகசிய கூட்டணி பேச்சுவார்த்தை நடந்ததாக சி.வி.சண்முகம் மீண்டும் மீண்டும் குற்றம் சாட்டை முன்வைப்பது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Read more: இவற்றை நீங்கள் மைக்ரோவேவில் சூடுபடுத்துகிறீர்களா..? உடனே நிறுத்துங்கள்..! இல்லன்னா சிக்கல்..!



