தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறவுள்ள நிலையில், அரசியல் களம் பெரும் பரபரப்பில் ஆழ்ந்துள்ளது. சமீபத்தில் வெளியான தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளில் பெரும்பாலானவை திமுக கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று தெரிவித்துள்ளன. இதனால் திமுகவினர் மிகுந்த உற்சாகமாக காணப்படுகின்றனர்.
திமுக அதிமுகவை விட விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் அதிக இடங்களை பிடிக்கும் என்று ஒரு கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்க செய்து உள்ளது. சட்டமன்றத் தேர்தல் களத்தில் எப்போதும் இல்லாத வகையில் இந்த முறை பலத்த போட்டி நிலவுவதால் ஆட்சி அமைக்கப்போவது யார்? என்பதை கணிக்க முடியாத நிலையே இருந்து வருகிறது.
இதனிடையே தேர்தல் முடிவுகள் வெளியாகும் நாளை (மே 4, 2026) முன்னிட்டு, அண்ணா அறிவாலையம் நுழைவு வாயில் அருகே அமைக்கப்பட்ட சிறப்பு கவுண்ட்-டவுன் திரை கவனம் ஈர்த்துள்ளது. இந்த திரையில், தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் முக்கிய நேரமான மதியம் 12 மணியை நோக்கி நேரக் கடிகாரம் தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்த ‘கவுண்ட்-டவுன்’ வசதி மூலம், முடிவுகள் வெளியாக இன்னும் எத்தனை மணி நேரங்கள், நிமிடங்கள் மற்றும் நொடிகள் மீதமுள்ளன என்பதைக் கண்காணிக்க முடிகிறது. தேர்தல் களத்தில் நிலவும் பரபரப்பை பிரதிபலிக்கும் இந்த நேரக் கணிப்பு, அரசியல் ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிக கவனத்தைப் பெற்றுள்ளது.


