2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் மாநில அரசியலில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. விஜய் தலைமையிலான தவெக, 108 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. இதன் மூலம் பல தசாப்தங்களாக தமிழக அரசியலில் ஆதிக்கம் செலுத்தி வந்த திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு பெரிய கட்சிகளின் ஆதிக்க அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.
இந்த தேர்தல் முடிவுகளை தொடர்ந்து சமூக வலைதளங்களில் பரபரப்பான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இதனிடையே பிரபல திரைப்பட இயக்குநர் ராம் கோபால் வர்மா தனது X தளத்தில் பகிர்ந்த பதிவு பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. மறைந்த முன்னாள் முதலமைச்சரும், திமுக முன்னாள் தலைவருமான கருணாநிதி உடன் இளம் வயதில் விஜய் இருக்கும் பழைய புகைப்படத்தை பகிர்ந்த அவர், “தனக்குப் பின்னால் இருக்கும் இந்த சிறுவன் ஒருநாள் தன் கட்சியை அழித்துவிடுவான் என்று கலைஞர் கனவிலும் நினைத்திருக்க மாட்டார்” என்று குறிப்பிட்டுள்ளார்.
தமிழக அரசியலில் கலைஞர்: பலரும் இந்த புகைப்படத்தை தமிழக அரசியலின் தலைமுறை மாற்றத்தின் அடையாளமாக பகிர்ந்து வருகின்றனர். தமிழக அரசியலில் கலைஞர் கருணாநிதி மிக முக்கியமான தலைவராக திகழ்ந்தவர். திராவிட இயக்க அரசியலில் முக்கிய பங்காற்றிய அவர், 1957-ம் ஆண்டு முதல் முறையாக சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பின்னர் ஐந்து முறை தமிழக முதலமைச்சராக பதவி வகித்து மாநில அரசியலில் அழியாத தடம் பதித்தார். பல தசாப்தங்களாக திமுக தமிழக அரசியலில் முக்கிய சக்தியாக இருந்து வந்த நிலையில், தற்போது விஜயின் அரசியல் எழுச்சி புதிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
விஜயின் அரசியல் எழுச்சி: விஜயின் அரசியல் அறிமுகம் தமிழகத்தில் மிகப்பெரிய அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. வெறும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மட்டுமே கட்சியை தொடங்கிய அவர், முதல் சட்டமன்றத் தேர்தலிலேயே 108 இடங்களை கைப்பற்றியுள்ளார். அவர் போட்டியிட்ட திருச்சிராப்பள்ளி கிழக்கு மற்றும் பெரம்பூர் ஆகிய இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளார். இருப்பினும் விதிகளின்படி ஒரு தொகுதியை ராஜினாமா செய்ய வேண்டியதால், தவெகவின் பலம் 107 ஆக குறையும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் 5 எம்எல்ஏக்கள் தவெகவிற்கு ஆதரவு அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் மூலம் ஆட்சியமைக்க தேவையான பெரும்பான்மைக்கு விஜய் மேலும் நெருங்கியுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது பெரும்பான்மைக்கு தேவையான 118 உறுப்பினர்களை எட்ட மற்ற கட்சிகளுடனும் தீவிர ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன.
இந்த சூழலில், விஜய் சென்னையில் உள்ள லோக்பவனில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அவர்களை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். இருப்பினும், தேவையான பெரும்பான்மை ஆதரவை நிரூபிக்கும் வகையில் 118 எம்எல்ஏக்களின் பட்டியலுடன் மீண்டும் வருமாறு ஆளுநர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசியலில் திடீர் திருப்பங்களை ஏற்படுத்தியுள்ள இந்த தேர்தல் முடிவுகள், அடுத்த சில நாட்களில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Read more: விஜய்க்கு எதிராக திமுக – அதிமுக கூட்டணி..? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஸ்டாலின்..!



