தமிழக அரசியலில் ஆட்சி மாற்றத்தைச் சுற்றிய பரபரப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், சென்னை அபிராமபுரம் பசுமைவழிச்சாலையில் உள்ள முன்னாள் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் ‘குறிஞ்சி’ இல்லத்தைச் சுற்றி புதிய அரசியல் சர்ச்சை வெடித்துள்ளது. அவருக்கு வழங்கப்பட்டிருந்த போலீஸ் பாதுகாப்பு திடீரென வாபஸ் பெறப்பட்டு, சில மணி நேரங்களிலேயே மீண்டும் வழங்கப்பட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி பின்னடைவைச் சந்தித்ததைத் தொடர்ந்து, ஆட்சி மாற்றத்திற்கான சூழல் உருவான நிலையில், அமைச்சர்களுக்கான பல்வேறு சலுகைகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் படிப்படியாக குறைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக, அமைச்சர்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த அரசு பங்களாக்கள் மற்றும் பாதுகாப்பு அமைப்புகள் மீளாய்வு செய்யப்பட்டன.
உதயநிதி ஸ்டாலினுக்கு ஒதுக்கப்பட்டிருந்த ‘குறிஞ்சி’ இல்லம், அமைச்சர்களுக்கான அனைத்து வசதிகளுடனும் செயல்பட்டு வந்தது. 24 மணி நேரமும் மூன்று ஷிப்ட்களில் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்ட நிலையில், தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அந்த பாதுகாப்பு முழுமையாக வாபஸ் பெறப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. அங்கு பணியில் இருந்த போலீசாருக்கும் தற்காலிக விடுப்பு வழங்கப்பட்டதால், இல்லம் சில மணி நேரங்களுக்கு அமைதியான சூழலில் இருந்ததாக கூறப்படுகிறது.
இதற்கிடையில், முன்னாள் அமைச்சர்கள் அரசு பங்களாக்களை 15 முதல் 20 நாட்களுக்குள் காலி செய்ய வேண்டும் என்று பொதுப்பணித்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. எடப்பாடி பழனிசாமி மற்றும் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோருக்கும் இந்த அறிவிப்பு சென்றதாக கூறப்படுகிறது. ஆனால், உடனடியாக வீடுகளை காலி செய்வது சிரமம் என்பதால், குறைந்தது இரண்டு மாத அவகாசம் வழங்க வேண்டும் என்று அவர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சூழலில்தான் தவெக ஆட்சியமைப்பதில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் தமிழக அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தின. விஜய் தலைமையிலான தவெக பெரும்பான்மை எண்களை திரட்டுவதில் சிரமம் நீடிப்பதால், ஆட்சியமைப்பு தொடர்பான நிலைமை உறுதியற்றதாக மாறியுள்ளது. இதன் பின்னணியில், திமுக மற்றும் அதிமுக இடையே மறைமுக அரசியல் பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.
இந்த அரசியல் மாற்றங்களின் நடுவில், உதயநிதி ஸ்டாலின் வீட்டில் இருந்து வாபஸ் பெறப்பட்ட போலீசார் திடீரென மீண்டும் நள்ளிரவில் பணிக்கு அழைக்கப்பட்டனர். தற்போது அவர்கள் மீண்டும் வழக்கம்போல் ‘குறிஞ்சி’ இல்லத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்ட சில மணி நேரங்களிலேயே மீண்டும் வழங்கப்பட்டிருப்பது, தமிழக அரசியலில் ஏதோ முக்கிய மாற்றங்கள் நடைபெறுவதை காட்டுவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். அதேசமயம், பசுமைவழிச்சாலையில் உள்ள மற்ற அமைச்சர்கள் பங்களாக்களில் பராமரிப்பு பணிகள் தொடங்கப்பட்டிருந்த சூழலில், இந்த திடீர் மாற்றம் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
Read more: இந்தியாவின் அடுத்த முப்படைத் தளபதியாக என்.எஸ். ராஜா நியமனம்..! யார் இவர்..?



