தமிழகத்தின் 13-ஆவது முதலமைச்சராக ஜோசப் விஜய் நேற்று பதவியேற்ற நிலையில், இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்திக்க உள்ளார். சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள மு.க.ஸ்டாலினின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற உள்ளது. தகவலின்படி, பிற்பகல் 2.30 மணியளவில் நடைபெறவுள்ள இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானதாக கூறப்படுகிறது. முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு விஜய் மேற்கொள்ளும் முக்கிய அரசியல் சந்திப்புகளில் இதுவும் ஒன்றாக பார்க்கப்படுகிறது.
நேற்று சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் ஆளுநர் முன்னிலையில் விஜய் முதலமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து கொண்டார். அவருடன் 9 அமைச்சர்களும் பதவியேற்றனர். அதன் பின்னர் சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலுக்கு சென்று பெரியார் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து இன்று 17-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டமும் நடைபெற்றது.
முதலமைச்சராக பதவி ஏற்றப்பின் தவெக தலைவர் விஜய் முதல் முறையாக சட்டமன்றம் வந்தார். முதலமைச்சர் விஜய் இன்று கோட் சூட்டில் சட்டசபைக்கு வந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. சட்டப்பேரவையில் முதலமைச்சர் ருக்கையில் விஜய் அமர்ந்திருக்க எதிரே எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் அமர்ந்திருந்தார்.
புதிய எம்எல்ஏக்கள் அனைவருக்கும் தற்காலிக சபாநாயகர் கருப்பையா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். முதலாவதாக பெரம்பூர் தொகுதி எம்.எல்.ஏ முதலமைச்சர் விஜய் உறுதி மொழி ஏற்று பதவி ஏற்றார். தொடர்ந்து அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் உறுதிமொழி ஏற்று பதவி ஏற்றனர். தமிழக அரசியலில் கடுமையான தேர்தல் போட்டிக்குப் பிறகு, தமிழ்நாட்டு முதலமைச்சர் விஜயும், முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலினும் நேரில் சந்திப்பது அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
Read more: தமிழக அரசியல் புதிய சகாப்தம்.. உதயநிதி vs விஜய் என மாறும் களம்..!



