கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் மூலவட்டம் பகுதியைச் சேர்ந்தவர் சுனில் குமார் (வயது 53). இவர் முச்சக்கர வண்டி ஓட்டி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு லாட்டரி குலுக்கல் பரிசு திட்டத்தில் லாட்டரி சீட்டு ஒன்றை சுனில் குமார் வாங்கியுள்ளார். இதற்கான முதல் பரிசு ரூ.1 கோடியாகும்.
தொடர்ந்து கடந்த 18ஆம் தேதி லாட்டரி சீட்டு குலுக்கல் நடத்தப்பட்டு மறுநாள் பரிசு பெற்றவர்கள் விவரங்கள் வெளியிடப்பட்டது. இதற்கிடையே, தனக்கு பெரியளவில் பரிசு தொகை கிடைக்காது என கருதி, தான் வாங்கியிருந்த லாட்டரி சீட்டை வீட்டில் உள்ள குப்பை தொட்டியில் வீசிவிட்டு வழக்கமான வேலையை கவனிக்க தொடங்கிவிட்டார்.
ஆனால், லாட்டரி சீட்டு பற்றிய எண்ணம் அவரது மனதின் ஓரத்தில் ஓடிக்கொண்டே இருந்தது. இதையடுத்து, நேற்று முன்தினம் தான் குப்பை தொட்டியில் வீசிய லாட்டரி சீட்டை குப்பை கழிவுகளை கிளறி ஒருவழியாக தேடி கண்டுபிடித்து எடுத்தார். அப்போது அவரே எதிர்பாராத வகையில், முதல் பரிசான ரூ.1 கோடி அவர் வாங்கிய லாட்டரி நம்பருக்கு விழுந்தது தெரியவந்தது.
இதை அறிந்ததும் சுனில்குமார் அளவில்லா மகிழ்ச்சியில் திக்குமுக்காடினார். மேலும் இந்த ரூ.1 கோடியை வைத்து அடமானம் வைத்த வீட்டை மீட்டு, புதிய வீடு கட்ட உள்ளதாகவும், வாங்கிய கடன் அனைத்தையும் அடைக்க உள்ளதாகவும், தனக்கு தெய்வம் பரிசை வழங்கி உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.