அரியலூர் மாவட்டம், இளங்குடந்தை கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திகா (24). இவர் காங்கயத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான நூல் மில்லில் பணிபுரிந்து வந்தார். அதே மில்லில் பணிபுரிந்தவர் விக்னேஷ். இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இவர்கள் இருவரும் கடந்த 7 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு கனீஸ் (6) என்ற மகனும், மகாஸ்ரீ (3) என்ற மகளும் உள்ளனர்.
இந்த நிலையில், தம்பதியினரிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இருவரும் பிரிந்து தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர். கார்த்திகா தனது மகள் மகாஸ்ரீயுடன் ஈரோடு மாவட்டம், நம்பியூர் அருகேயுள்ள பழைய அய்யம்பாளையம் பகுதியில் இயங்கிவரும் நூல் மில்லில் உள்ள குடியிருப்பில் தங்கி பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன் தினம் தனது மகளை காவலாளி அறை அருகில் உள்ள அறையில் கட்டிலில் படுக்க வைத்துவிட்டு வேலைக்கு சென்றுவிட்டார். பின்னர் மாலையில் திரும்பி வந்து பார்த்தபோது குழந்தை மகாஸ்ரீ தூங்கிக் கொண்டிருந்தது.
இதனையடுத்து கார்த்திகா தனது மகளின் அருகிலேயே படுத்து தூங்கியுள்ளார். சிறிது நேரத்தில் காவலாளி கார்த்திகாவை எழுப்பியுள்ளார். பின்னர் கார்த்திகா வெளியே சென்று காவலாளியிடம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது குழந்தை அழும் சத்தம் கேட்டு உள்ளே சென்று கார்த்திகா பார்த்த போது தூங்கிக் கொண்டிருந்த அவரது மகள் கட்டில் இருந்து தவறி கீழே விழுந்து தலையில் பலத்த காயமடைந்தது.
காயமடைந்த குழந்தையை மீட்டு கோபி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த குழந்தை மகாஸ்ரீ, சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து வரப்பாளையம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.