கர்நாடக மாநிலத்தில் சட்டசபை தேர்தலை நடைபெற உள்ள நிலையில், ஜனதா தளம் கட்சியின் தலைவர் குமாரசாமி மாநிலம் முழுவதும் பஞ்சரத்னா யாத்திரையை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், அவர் நேற்று துமகூரு மாவட்டத்தில் உள்ள திப்தூரில் பஞ்சரத்னா யாத்திரை நடத்தினார். தொண்டர்களிடம் பேசுகையில், “விவசாயிகள் எப்போதும் கடன்காரர்களாக இருக்கக்கூடாது. இதற்காக நான் எனது பஞ்சரத்னா திட்டத்தில் நிறைய திட்டங்களை இணைத்துள்ளேன்.
ஒவ்வொரு ஆண்டும் பருவமழை காலம் தொடங்குவதற்கு முன்பு விவசாயிகள் உழவு பணிகளை மேற்கொள்ள ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் வீதம் 10 ஏக்கர் வரை வழங்கப்படும். விவசாயிகளின் குழந்தைகளுக்கு தரமான கல்வியை வழங்க வேண்டும். அதற்காக கிராம பஞ்சாயத்துகள் தோறும் அரசு பப்ளிக் பள்ளிகள் தொடங்கப்படும். பொதுமக்களின் வசதிக்காக கிராம பஞ்சாயத்துகளில் சுகாதார நிலையங்கள் நிறுவப்படும். நாட்டில் விவசாயிகளின் மகன்களுக்கு யாரும் பெண் கொடுப்பது இல்லை. கர்நாடக மாநிலத்தில் ஜனதா தளம் ஆட்சி அமைந்தால் விவசாயிகளின் மகன்களை திருமணம் செய்து கொள்ளும் பெண்களுக்கு ரூ.2 லட்சம் நிதி உதவி வழங்கப்படும்” என்று தெரிவித்தார்.