தமிழக சட்டமன்றத் தேர்தலில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. இருப்பினும், ஆட்சியமைக்க தேவையான 118 உறுப்பினர்கள் பலம் இல்லாததால், கூட்டணி மற்றும் வெளி ஆதரவைப் பெற தவெக தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.
தேர்தல் முடிவுகள் வெளியானதும், காங்கிரஸ் கட்சி முதன்முதலாக தவெகவுக்கு ஆதரவு தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து, சிபிஎம், சிபிஐ, விசிக மற்றும் ஐயூஎம்எல் உள்ளிட்ட கட்சிகளிடமும் தவெக ஆதரவு கோரியது. இதில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஎம்) ஆகியவை தவெகவுக்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளன.
இதற்கிடையே தவெகவுக்கு ஆதரவு தெரிவிப்பது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல் திருமாவளவன் நேற்று ஜூம் மீட்டிங் வழியாக உயர்மட்ட நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டத்தை நடத்தினர். இந்த கூட்டத்தில் எடுத்து கொண்ட முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை. இதுபற்றி இன்று காலையில் அறிவிப்பதாக திருமாவளவன் கூறியிருந்தார். தவெக பெரும்பான்மையை நிரூபிக்க இன்னும் 2 இடங்கள் தேவை என்ற நிலையில், விசிக எந்த நிலைப்பாட்டை எடுக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் தவெக ஆதரவு தொடர்பாக விசிக இன்று மாலை 4 மணிக்க அறிவிக்க உள்ளதாக கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. திருமாவளவன் வைத்திருக்கும் 2 எம்எல்ஏக்களின் ஆதரவு கிடைத்தால் விஜய்யால் எளிதாக ஆட்சியை பிடிக்க முடியும். ஆதரவு கிடைக்காவிட்டால் ஆட்சியை பிடிப்பதில் மீண்டும் இழுபறி நிலவும். விசிக முடிவை அறிவிக்க நீடிக்கும் தாமதம் தவெகவினரை திக்கு முக்காட வைக்கிறது.
Read more: திரிஷாவை விஜய் திருமணம் செய்துகொள்ள வேண்டும்.. பிரபல நடிகை கருத்தால் சர்ச்சை..!



