2026 சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.. தவெக 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.. திமுக கூட்டணி 73 இடங்களிலும், அதிமுக கூட்டணி 53 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.. ஆட்சியமைக்க 118 இடங்களில் வெற்றி பெற வேண்டும்.. எனவே அதிக இடங்களில் வெற்றி பெற்றாலும் தவெக ஆட்சியமைக்க பெரும்பான்மை கிடைக்கவில்லை.. எனவே தவெகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில் அடுத்தது தொங்கு சட்டசபை அமைகிறது.
தேர்தல் முடிவுகள் வெளியானதும், காங்கிரஸ் கட்சி முதன்முதலாக தவெகவுக்கு ஆதரவு தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து, சிபிஎம், சிபிஐ, விசிக மற்றும் ஐயூஎம்எல் உள்ளிட்ட கட்சிகளிடமும் தவெக ஆதரவு கோரியது. இதில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஎம்) ஆகியவை தவெகவுக்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளன. இதனிடையே விசிகவும் நிபந்தனையற்ற ஆதரவு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் பெரும்பான்மையை நிரூபிக்கும் பட்சத்தில் தமிழ்நாட்டில் முதலமைச்சராக பொறுப்பேற்பார்.
மறுபுறம் தவெகவுக்கு ஆதரவளித்து கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டும் என அதிமுகவில் போர்க்கொடி எழுந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.. குறிப்பாக முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம், எஸ்.பி.வேலுமணி தவெக உடன் கூட்டணி அமைக்க வேண்டும் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. இப்படியான சூழலில் 30-க்கும் மேற்பட்ட அதிமுக எம்.எல்.ஏக்கள் கடந்த இரண்டு நாட்களாக புதுச்சேரி ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். “குதிரை பேர” அரசியலைத் தவிர்க்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அதனைத்தொடர்ந்து இன்றைய தினம் புதுச்சேரியில் தங்க வைக்கப்பட்டிருந்த அதிமுக எம்.எல்.ஏக்கள் சென்னைக்கு வரவழைக்கப்பட்டனர். தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக எம்.எல்.ஏக்களுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது. ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் புதிதாக ஆட்சி அமைக்க உள்ள கட்சிக்கு வாழ்த்து தெரிவித்து எடப்பாடி பழனிச்சாமி எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.
இந்த நிலையில் சி.வி.சண்முகம் தலைமையில் தனி ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருவது அரசியல் களத்தை மேலும் சூடுபடுத்தியுள்ளது. சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள அவரது இல்லத்தில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. முன்னதாக எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் முடிந்த சில மணி நேரங்களுக்குப் பின்னர் இந்த தனி ஆலோசனை நடைபெற்றுள்ளது. இதனால் அதிமுக உள் அரசியலில் புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்தில் எஸ்.பி.வேலுமணி, எம்.ஆர்.விஜயபாஸ்கர், லீமா ரோஸ் உள்ளிட்ட 36 எம்.எல்.ஏக்கள் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. தற்போதைய அரசியல் சூழ்நிலை, கூட்டணி கணக்குகள் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. குறிப்பாக விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு அளிப்பது தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது.



