America:அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது. தனி நபர்கள் துப்பாக்கி வைத்திருக்க அரசு அனுமதிக்கிறது. அதை பயன்படுத்துவதற்கும் எண்ணற்ற கட்டுப்பாடுகள் உள்ளன. 18 வயதுக்குட்பட்ட தனிநபர்கள், தண்டனை பெற்ற குற்றவாளிகள் மனநலம் குன்றியவர்கள் உள்ளிட்டோர் துப்பாக்கி வைத்திருக்க தடையும் உள்ளது. ஆனாலும் பல்வேறு இடங்களில் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அரங்கேறி வருகிறது.
இந்நிலையில், கெண்டகி மாகாணம் லுயிஸ்வெலி பகுதியில் ஓட்டுனர் உரிமம் பதிவு அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தின் வாகனம் நிறுத்தும் இடம் அருகே சிலர் நின்றுகொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த நபர் திடீரென அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பி ஓடினார். இதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் இருவர் பலத்த காயம் அடைந்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், துப்பாக்கி சூடு நடத்திவிட்டு தப்பிச்சென்றவர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.